Wednesday 29 August 2018

மைக்கேல் ஜேக்சனை பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்!!!!



மைக்கல் ஜாக்சன் பற்றி சாரு ஏன்னா சொல்றார்னா...



சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தை தினசரி ஒருதடவையேனும் தட்டி பார்ப்பது எனது வழக்கம்.பேஸ்புக்கில் பொழுது போகாத சமயங்களில் கொஞ்சம் பொழுது போக்கவும்,சில நல்லவிடயங்கள் மற்றும் பல நகைச்சுவை விடயங்களுக்காகவும் வாசகர்வட்டம் பக்கம் போகிறனான்.கடந்த சனி கிழமை செல்லும் போது மைக்கல் ஜாக்சன் பற்றிய நினைவு குறிப்புகள் இரண்டு என் கைக்கு தட்டுப்பட்டது.ஆக்சுவலி கண்ணுக்கு தட்டுப்பட்டது.மைக்கல் ஜாக்சனுக்கு ரசிகர்கள் இல்லாதவர்களே இல்லை எனலாம்.அந்த வகையில் அந்த கட்டுரைகள் என்னை கவர்ந்திருந்தன.நினைவுகளை மீட்ட வைத்தன.இரண்டாவது கட்டுரை தான் சாருவினுடையது.வாசித்து பாருங்கள்."கிங் ஆப் பொப்" பற்றி நினைக்கும் போதே துக்கம் நெஞ்சை முட்டும்!

கொஞ்சம் நீளமாக தான் இருக்கும்.பொறுமையாக வாசித்து பாருங்கள்.நேரம் கிடைக்காவிடில் அப்புறமாக வந்து பாருங்கள்.நிச்சயம் ஒவ்வொருவாரும் பார்க்க வேண்டிய நினைவுப்பதிவுகள்.(சாருவை பிடிக்காவிட்டாலும் MJ 'வை பிடித்திருக்கும் தானே!



'மரணப்படுக்கையில் மைக்கேல்
ஜாக்ஸன்’ என்று கடந்த சில வருடங்களாகவே கிங் ஆஃப் பாப் என்றழைக்கப்படும் மைக்கேல்
ஜாக்ஸன் பற்றிய ஆபத்துச்
செய்திகள் அடிக்கடி
வந்துகொண்டிருந்தன. ரசிகர்கள் இரண்டு நாள் பதைபதைப்பார்கள். பிறகு, யாவரும்
நலம் என்று அறிவிப்பு
வந்தவுடன் பெருமூச்சு
விட்டுக்கொண்டு கடவுளுக்கு
நன்றி சொல்லி மகிழ்வார்கள். வருகிற ஜூலை மாதத்தில்
லண்டனில் 12 நிகழ்ச்சிகளில் நடனமாடப்போகிறேன், மார்ச் வரை 50 நிகழ்ச்சிகளில் என்று சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல்
ஜாக்ஸன் திடீர் அறிவிப்பொன்றை வெளியிட்டபோது சர்வ இசைலோகமும்
இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போனது. 12 வருடங்கள் கழித்து
மீண்டும் மேடையில்
லைவாக ஜாக்ஸன்
என்று நினைக்கும்போதே ரசிகர்களுக்கு மயிர் கூச்செறிந்தது. 8 லட்சம் டிக்கெட்டுகளும் ஐந்து மணி நேரத்தில் சுடச்சுட
விற்றுப்போயின. இத்தனைக்கும் ஒரு டிக்கெட்டின்
விலை 5000 ரூபாய்.

முதலில் ஏஓஎல் இணையத்தளத்தில்தான் மைக்கேல்
ஜாக்ஸனின் மரணச் செய்தி வெளியிடப்பட்டது. சமீபகாலமாகவே நிறைய பெயின் கில்லர்களை உட்கொண்டு
நடனப் பயிற்சிகளில்
ஈடுபட்டு வந்தார். லண்டன் நிகழ்ச்சிக்காக விடாது ரிகர்ஸல்
செய்ததில் உடல், மேலும் அவரைப் படுத்திக்கொண்டிருந்தது. உடல்முழுக்க விதவிதமான
நோய்கள், குறைபாடுகள். அத்தனையும் சேர்த்து 26ம் தேதி அவர் மூச்சை நிறுத்தியது. வழக்கம்போல மற்றோரு
வதந்தி என்று அரை நம்பிக்கையில் இருந்த ஜாக்ஸன்
ரசிகர்கள் சர்வதேச
பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் அந்த துக்கச்
செய்தி உறுதி செய்யப்பட்டவுடன் நொடிந்துபோனார்கள். மைக்கேல்
ஜாக்ஸனுக்கு முன்னால்
மரணமடைந்த பாப் மாமேதை எல்விஸ் பிரிஸ்லி
போலவே இளம்வயதில்
மரணம் (வெளிநாட்டில் 50 வயது என்பது மிடில் ஏஜ்). எல்விஸ்போலவே
உருவ மாற்றத்திலும் தீராப்பிணியிலும் சிக்குண்டு
தடாலடியாக ஒருநாளில்
மரணம். ரசிகர்கள் கதறியழுகை.

இருபதாம் நூற்றாண்டின்
மகத்தான் கலைஞன் என்கிற முத்திரை எம்.ஜே என்று செல்லமாக
அழைக்கப்படும் மைக்கேல்
ஜாக்ஸனுக்கு உண்டு. தன் சகோதரர்களுடன் ஜாக்ஸன் 5 என்கிற குழுவில் இடம்பிடித்த
ஜாக்ஸன் 16 வயதுமுதல்
சோலோவாக ஆல்பம் தயாரித்து
வந்தார். இவருடைய உச்சம், 1982ல் அதாவது தன் 24 வயதில் வெளியிட்ட
த்ரில்லர் ஆல்பம். இன்றுவரை
உலகில் அதிகம் விற்கப்பட்டு
கின்னஸில் இடம்பிடித்த
இசை ஆல்பம். 6.5 கோடி காப்பிகள். அவருடைய அத்தனை ஆல்பங்களும்
இதுவரை 20 கோடி காப்பிகள் விற்றுள்ளன (1700 கோடி ரூபாய்க்கு விற்பனை). எந்த இசைக்கலைஞனாலும் எட்டமுடியாத
சாதனை இது. இவர்போல
இன்னொரு கலைஞன் இனியில்லை
என்று ஏ.ஆர். ரஹ்மான்
மைக்கேல் ஜாக்ஸன்
இறந்த சில மணி நேரங்களில் அஞ்சலி அறிக்கை
வெளியிட்டுள்ளார். எம்.ஜே இன்றி நாங்களில்லை
என்கிறார்கள் பிரபுதேவாவும் பிரபல ஹிந்தி நடனக்கலைஞர் ஃபரா கானும். விமர்சனங்கள்
மலிந்துள்ள இந்த உலகில் மைக்கேல் ஜான்ஸனின்
திறமையையும் மதிப்பையும்
கைநீட்டி குறை சொல்ல ஒருவரும் இல்லை என்பதுதான்
எம்.ஜேவின் 30 வருட இசைப் பயணத்தின்
தன்னிகரற்ற சாதனை.

மைக்கேல் ஜாக்ஸனின்
பெரிய சொத்து, ரசிகர்களின்
வெறித்தனமான அன்பு என்றாலும்
கணக்கு வழக்குக்குச்
சொல்லவேண்டுமென்றால் இதுவரை மைக்கேல்
ஜாக்ஸன் என்கிற பிராண்ட்
மூலமாக அவர் சம்பாதித்தது - 2500 கோடி ரூபாய். முக்கியமாக 1980 மற்றும் 1990களில் வருடத்துக்கு 250 கோடியை மிக எளிதாக சம்பாதித்து
வந்தார். பாப் உலகுக்கு
எம்.ஜேவை விட்டால்
வேறு கலைஞனில்லை
என்றிருந்த காலகட்டம்
அது. ஆனால் இன்று மைக்கேல்
ஜாக்ஸனின் கடன்தொகை 2500 கோடிக்குச்
சென்று நிற்கிறது. எப்படி இப்படி ஆனது?

காசை கண்டபடி
செலவு செய்து உல்லாசியாக
வாழ்ந்தவர் என்றொரு
அழுத்தமான குற்றச்சாட்டு மைக்கேல்
ஜாக்ஸன் மீது உண்டு. லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் வாழ்ந்துவந்த
வாடகை வீட்டின்
மாத வாடகை மட்டும் 50 லட்சம். எங்கு சென்றாலும் இரண்டு தனி விமானங்கள். கூடவே இருபது உதவியாளர்கள். செலவுக்கும்
வரவுக்கும் ஈடுகட்ட
முடியாமல் 350 கோடி ரூபாயை பேங்க் ஆஃப் அமெரிக்காவிலிருந்து கடனாகப்
பெற்றார் எம்.ஜே. பிரிட்னி
ஸ்பியர்ஸ் போன்ற சமகால பாப் பாடகிகள்
ஒரு பாப் ஆல்பத்துக்கு 25 கோடி ரூபாய் செலவிடுவார்கள் என்றால் 2001ல் வெளியிடப்பட்ட ’இன்விசிபிள்’ என்கிற தன் இறுதி ஆல்பத்துக்கு
எம்.ஜே செலவிட்ட
தொகை 125 கோடி. சமீபத்தில்
நியூயார்க்கில் ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில்
சில மணி நேரங்களில்
தங்கியதற்கு எம்.ஜே செலுத்திய பில்லின்
தொகை 50 கோடி. ஒருமுறை
லாஸ் வேகாஸில்
உள்ள ஒரு கடையில் 5 லட்சத்துக்கு
செண்ட் பாட்டில்
வாங்கியிருக்கிறார். இப்படி உல்லாச வாழ்க்கைக்குரிய தினசரி நடவடிக்கைகள், கோர்ட் செட்டில்மெண்டுகள், வருமான வரி, ஊழியர்கள்
சம்பளம், அதீதப் போக்குவரத்துச் செலவு, சொத்துக்களின் பராமரிப்புச்
செலவுகள் போன்ற காரணங்களால்
வரவு எட்டணா செலவு பத்தணா என்கிற வாழ்க்கையையே
இறுதிவரை வாழ்ந்து
வந்தார் மைக்கேல்
ஜாக்ஸன். ஆல்பம் விற்பனையில்
இன்றைக்கும் எம்.ஜேவுக்கு
ஒவ்வொரு வருடமும் 100 கோடி ருபாய் வருமானம்
ராயல்டியாகக் கிடைக்கிறது. ஆனால் அவருடைய ஒரு வருட செலவு 150 கோடி ரூபாய் என்பதால்
இறக்கும்போது ‘2500 கோடி ரூபாய் கடனாளி’ என்கிற கெட்டப்பெயர் அவருக்குக்
கிடைத்துவிட்டது.

செலவு தாக்குப்
பிடிக்காமல் தீம் பார்க் மற்றும் உயிரியல்
பூங்கா போன்ற உல்லாச வசதிகள் கொண்டிருந்த
தனது அழகான 2500 ஏக்கர் பரப்பளவு
கொண்ட நெவர்லேண்ட்
பண்ணையை முதலில்
அடமானத்துக்கு வைத்து பிறகு விற்பனை செய்துவிட்டார் எம்.ஜே. அந்தப் பண்ணையில்தான் அவர் சிறுவர்களுடன் தவறாக காரியங்களில்
ஈடுபடுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததால்
வெறுத்துப்போய் அதை விற்று மனச்சுமையின்றி சிறிது காலம் வாழ எண்ணினார். தன் வீட்டு நிலங்கள், சோனியுடனான
பங்குகள் என்று மைக்கேல்
ஜாக்ஸனின் சொத்து மதிப்பு 500 கோடி என்று அறியப்பட்டாலும் அந்தப் பணத்தைக்
கொண்டு உடனடியாகக்
கடனை அடைக்கமுடியாது என்பதால்
பண்ணையிலிருந்த தன் ஆயிரம் உடைமைகளை ஏலத்தில்
விற்க முதலில்
அனுமதித்தார் எம்.ஜே. 15 கோடிவரை
அவருடைய பொருள்கள்
விலைபோகும் என்றும்
அவரது கிளவுஸ்
மட்டும் 10 லட்சத்துக்கு
ஏலம் போகும் என்றும்
ஏலவிற்பனை பரபரப்புடன்
எதிர்பார்க்கப்பட்டது. பிறகு என்ன நினைத்தாரோ
திடீரென ஏல திட்டத்தை
தடுத்து நிறுத்திவிட்டார். இதனால் இறுதிவரை ஜாக்ஸனின்
வட்டிக்கடன் நாளுக்கு
நாள் குட்டிப்
போட்டுக்கொண்டே போனது. தன் பாடல்கள் உரிமை மற்றும்
பிரபல பாப் குழுவான
பீட்டில்ஸின் பாடல்கள்
உரிமை (சோனியுடனான
கூட்டு உரிமை) ஆகிய இவ்விரு உரிமங்கள்
மட்டுமே கடைசிக்காலத்தில் எம்.ஜேவுக்கு
தொடர்ந்து வருமானம்
கொடுத்துக்கொண்டிருந்தன.

மேற்கு நாட்டில்
சர்ச்சைகளில், வம்பு வழக்குகளில்
சிக்காத இசைக்கலைஞர்களே கிடையாது. அதிலும்
மைக்கேல் ஜாக்ஸன்
அத்தனை பேருக்கும்
பெரியண்ணன் என்றுகூடச்
சொல்லலாம்.

அது ஒரு ஷேம் ஷேம் பப்பிஷேம்
விவகாரம். விசிறி என்றுதான்
ஆரம்பத்தில் எம்.ஜேவுடன்
அறிமுகமானார் இவான் சண்ட்லர். சில மாதங்களில் இவான் எம்.ஜேவின் நெருங்கிய நண்பரானார். எம்.ஜேவின் வீட்டுக்கு அடிக்கடி
இவானின் 13 வயது மகன் ஜார்டன்
வர ஆரம்பித்தான். அவனும் ஒரு மைக்கேல்
ஜாக்ஸன் பித்து. திடீரென
ஒருநாள், மைக்கேல் ஜாக்ஸன்
என் மகனை கெடுத்துவிட்டார் என்று இவான் ஊரைக் கூட்டியபோது
சீச்சீய் என்று எம்.ஜே ரசிகர்கள் முகம் சுழித்தனர். ஆம். என் மகனைக் கட்டிப்பிடித்து முத்தம்
கொடுத்திருக்கிறார். ஆணுறுப்பை வருடியிருக்கிறார். இன்னும்
என்னென்னவோ அசிங்கங்கள்
அவருக்கும் என் மகனுக்கும்
இடையே நடந்துள்ளன
என்று கூப்பாடு
போட்டு நீதிமன்றத்தை
நாடியபோது மைக்கேல்
ஜாக்ஸனின் பரிசுத்த
ஆவி இமேஜ் அந்த தருணத்தில் தகர்ந்துபோனது. ஒருவழியாக 110 கோடி ரூபாயை இவானின்
கையில் திணித்து
பிரச்னையைச் சரிகட்டினார்
எம்.ஜே. இந்தச் சமயத்தில் எம்.ஜேவின் பால்யகால தோழியும்
எல்விஸ் பிரிஸ்லியின்
மகளுமான லிசா மேரி, எம்.ஜேவுக்கு
பெரிய ஆறுதலாக
இருந்தது அப்படியே
அவரை எம்.ஜேவின் மனைவியாகவும் ஆக்கியது. இந்த பந்தம் ஒன்றரை வருடங்கள்
நீடித்தன. பிறகு, தன் தோல் நோய்க்கு
சிகிச்சை அளித்த செவிலி, ஜியான் ரோவை முதலில்
கர்ப்பமாக்கிவிட்டு பிறகு திருமணம்
செய்துகொண்டார் எம்.ஜே. இந்த உறவும் இரண்டு வருடத்திற்குள் காலாவதியாகிப் போனது. ரோவுடனான
உறவுக்குப் பரிசாக ஜாக்ஸனுக்கு
இரண்டு குழந்தைகள். மனைவி இல்லாவிட்டால் என்ன என்று வாடகைத் தாய் மூலமாக மூன்றாவது குழந்தையைப்
பெற்றுக்கொண்டார் எம்.ஜே. ஆனால் மூன்றாவது மகனின் தாயை இறுதிவரை வெளி உலகுக்குக்
காட்டவில்லை. தன் மூன்று குழந்தைகளுக்கும் தாயும் தகப்பனுமாக
தானே இருந்து
அக்கறையாக வளர்த்து
வந்தார்.

2005லும் ஒரு பாலியல்
பிரச்னை எம்.ஜேவின் இமேஜை உலுக்கியெடுத்தது. ஒரு டாகுமெண்டரிக்காக கவின் அர்விஸோ
என்கிற 13 வயது சிறுவனுடன் இணைந்து
பேட்டி கொடுத்த
எம்.ஜே, கவின் தன்னுடைய நெருக்கமான
நண்பன் என்றும்
இருவரும் ஒரே படுக்கையில்தான் துயில்வோம்
என்றும் வெள்ளந்தியாகப் பேசிவைக்க
அது கவினின்
பெற்றோரைக் கலவரப்படுத்தியது. அடுத்த சில நாள்களில்
எம்.ஜே மீதான மற்றொரு
பாலியல் தொந்தரவு
வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்குக்காகக் கைதானார்
எம்.ஜே. இரண்டு வருடங்கள் கழித்து
நிரபராதி என்கிற முத்திரையோடு
வழக்கிலிருந்து விடுபட்டார்
எம்.ஜே. ஆனால், ’ஆண்களுடன்
குறிப்பாக சிறுவர்களுடன் படுக்கையில்
ஒன்றாகப் படுப்பது
செளகரியமாக இருக்கிறது’ என்று டிவி ஒன்றுக்கு
அளித்த பேட்டி அவர்மீதான
கறையை மேலும் பளிச்சென்று
காட்டியது.

பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட பிறகு அமெரிக்காவை
வெறுத்தார் அவர். தன் இறுதி மூச்சை பஹ்ரைனில்
விடவேண்டும் என்று விரும்பினார். திடீரென்று
ஓர் அறிவிப்பை
வெளியிட்டார். இன்றுமுதல் நான் ஒரு முஸ்லீம். இனி என்னை எல்லோரும்
மிகயில் என்று அழைக்கவும். அமெரிக்க
வாழ்க்கையை விட்டொழித்துவிட்டு நான் நிரந்தரமாக
பஹ்ரைனில் குடியேறப்
போகிறேன் என்றார்
தீர்மானமாக. பஹ்ரைன் நாட்டு மன்னரின்
இரண்டாவது மகனான சைக் அப்துல்லாவும் எம்.ஜேவும் சிறிது காலம் முஸ்தபா
முஸ்தபா பாடிக்கொண்டிருந்தார்கள். அந்த நட்பு வேகத்தில்
அப்துல்லாவுக்கு கண்மூடித்தனமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார்
எம்.ஜே. நிச்சயம்
உங்களுக்காக ஒரு ஆல்பம், என் வாழ்க்கை வரலாறை நீங்கள்தான்
வெளியிடுகிறீர்கள். இவ்வாறு சொல்லிக்கொண்டு என்னிடம்
பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார் என்று பஹ்ரைன்
இளவரசர் திடீரென
ஒருநாள் 38 கோடிக்கு
எம்.ஜே மீது மானநஷ்ட
ஈடு வழக்கு தொடர்ந்தது
எம்.ஜேவின் பஹ்ரைன்
கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

வழக்கு விவகார தருணங்களில்
தன் உடல் நிலையை மிகவும் மோசமாக்கிக்கொண்டார் எம்.ஜே.1979ம் ஆண்டு முதலே தன் உடலை சித்ரவதை
செய்துகொண்டு அல்லது தன் உடலால் சித்ரவதைப்பட்டு வருகிறார்
ஜாக்ஸன். 21வது வயதில் மேடை நிகழ்ச்சியில் ஏற்பட்ட
விபத்தில் காயம்பட்ட
ஜாக்ஸன் தன் மூக்கின்
அமைப்பை கொஞ்சம்
தட்டி, ஒட்டி சரிசெய்துகொண்டார். நம் ஊரில் ஸ்ரீதேவி
தன் முக அமைப்பை
மாற்றியமைத்துக்கொண்டாரே அதேபோல. 80களில் ஜாக்ஸனுக்கு 'விட்டிலிகோ’ எனப்படும்
வெண்தாமரை நோயில் சிக்கினார். அவர் உடலெங்கும் வெள்ளைத்
திட்டுகள் தென்பட ஆரம்பித்தன. இந்த தோல் நோயின் தீவிரம்
அதிகமாகி அவர் முகத்தின்
தன்மையையே மாற்றியமைத்தது. கறுப்பு
நிறத்தால் ஏற்கனவே
தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்த
எம்.ஜேவும் சும்மா இருக்காமல்
முகத்தில் நான்கு இடங்களில்
உருவ மாற்ற அறுவை சிகிச்சை செய்து பல ஊசிகள், மருந்துகள் உட்கொண்டு
பால் வெள்ளை தோலுக்காக
மேலும் மேலும் தன் முகத்தை ரணமாக்கிக்கொண்டார். அடிக்கடி
வழக்குகளுக்காக கோர்ட்டுக்கு
சென்ற அலைச்சலில்
சரியாகச் சாப்பிடாமலும் இருந்தார். சைவத்துக்கு
மாறிய அவர் மெலிதான
உடற்கட்டை பாதுகாக்க
சாப்பிடுவதையே வெறுத்து
ஒதுக்கினார். மருந்தே உணவென வாழ்ந்த
அவருடைய எடை ஒருகட்டத்தில் 48 கிலோ அளவுக்குக்கூட குறைந்திருக்கிறது. கடைசிக்கால
கட்டத்தில் அவருக்குப்
புற்று நோய், நுரையீரல்
பாதிப்பு போன்ற பெரிய நோய்களும் தாக்கவே
பல வருடங்கள்
வீட்டுக்குள்ளேயே சுருண்டுக்
கிடக்க வேண்டிய
நிலைமை வந்தது.

ராணுவத்தினர் அணியும்
சீருடைகளில் மாற்றம்
செய்து அணிவது, கைகளில்
க்ளவுஸ், உடைகளில் வைரம் பதிப்பது, ஷார்ட் பேண்ட்… இப்படி ஜாக்ஸன்
அணிந்த உடைகள் அனைத்தும்
நாகரிக மாற்றத்தின்
ஆரம்பமாக, ஃபேஷன் அடையாளமாக அமைந்தன. த்ரில்லர், பேட், டேஞ்சரஸ், பில்லி ஜீன் போன்ற ஆல்பங்கள்
எல்லாம் இன்றைக்கும்
இளைஞர்களுக்கு இசை போதை. நெற்றிமுன்
சரிந்து விழும் கற்றைமுடியோடு மைக்கேல்
ஜாக்ஸன் மேடையில்
பிரசன்னமானவுடனே கடவுளை நேரில் பார்த்ததுபோல ரசிகர்கள்
நெக்குருகிப் போய்க் கதறி அழுவார்கள். காட்டுக்கூச்சல் போடுவார்கள். அப்படியொரு
பரவச அழுகை, மயிர்க்கூச்செரிப்பு இனி வாய்க்கப்போவதில்லை. இனியொரு 'பேட்’ பாயை இந்த நூற்றாண்டு
சந்திக்கப்போவதில்லை.


=============================================================


உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் சென்ற மாதம்தான் மைக்கேல் ஜாக்ஸன் இறந்து விடுவார் என்ற கொடுங்கனவு ஒன்றைக் கண்டு அவருடைய த்ரில்லர், பேட் , டேஞ்ஜரஸ், ஹிஸ்டரி போன்ற ஆல்பங்களைக் கேட்டேன். விரைவில் மைக்கேலின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும்
The Jacksons: An American
Dream என்ற படத்தையும் பார்த்து விட்டு அவரைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது.
மைக்கேலின் மரணம் பற்றி எனக்கு உள்ளுணர்வாகத் தோன்றிய கொடுங்கனவுக்கு, அவர் எடுத்துக் கொள்ளும் பலவிதமான வலி நிவாரணி மாத்திரைகள் குறித்த என் கவலையும் பதற்றமும் கூட காரணமாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
கலை, இலக்கியத் துறைகளில் பூகோள எல்லைகளையும், பத்தாம்பசலித் தனமான மதிப்பீடுகளையும் தாண்டிய தேடல் கொண்ட என் போன்றவர்களுக்கு 1982-இல் வெளிவந்த அவருடைய ’ த்ரில்லர் ’ என்ற ஆல்பம் மிகப் பெரிய கலை அனுபவத்தைத் தருவதாக இருந்தது. பின்னர், இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் தொண்ணூறுகள் வரை மைக்கேல் ஜாக்ஸன் அளவுக்கு எங்களின் வாழ்க்கையில் அவ்வளவு அந்தரங்கமாக ஊடுருவிய ஒரு கலைஞன் இருந்திருக்க முடியாது என்றே சொல்லலாம்.
வாழ்க்கையைக் குறித்த ஒரு ஜென் கதையை நாம் எல்லோரும் கேள்விப் பட்டிருப்போம். அடர்ந்த கானகத்தில் கொடும் விலங்கினால் துரத்தப்பட்டு ஓடிவரும் ஒருவன் பாழும் கிணற்றில் தடுமாறி விழுந்து, ஒரு விழுதைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறான். அப்போது அந்த மரத்திலிருந்து ஒரு பாம்பு அவனை நோக்கி நகர்ந்து வருகிறது. இவன் விழுந்ததால் கலைந்து போன தேன் கூட்டிலிருந்து தேன் சொட்ட, அந்தத் தேனை சுவைத்து நக்கினான் அவன் என்பது அந்தக் கதை
.
அந்தக் கதையில் வரும் அதே போன்ற அபாயகரமான சூழலில்தான் இன்றைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மதவாதிகளும், அரசியல்வாதிகளும், தேச பக்தர்களும், தேசத் துரோகிகளும், ஆயுத உற்பத்தியாளர்களும் இந்த உலகை ரத்தக் களரியாக்க்கிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் வாழ்வு குறித்த நம்பிக்கையையும், கனவையும் அளித்ததாலேயே உலகம் பூராவும் கோடிக்கணக்கான இளைஞர்களும், குழந்தைகளும் மைக்கேலை ஒரு தீர்க்கதரிசியைப் போல் கொண்டாடுகிறார்கள். அந்தக் காரணத்தினால்தான் அவருடைய ஆல்பங்களின் விற்பனை 75 கோடியைத் தாண்டின
;
13 கிராமி அவார்டுகள் கொடுக்கப்பட்டன.
இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு இந்த உலகில் அதிக அளவு பிரபலமானவராக அறியப்பட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். தேசம், மொழி, மதம் என்ற வரையறைகளையெல்லாம் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் அவருக்கு மிகத் தீவிரமான ரசிகர் கூட்டம் இருந்தது. தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் கூட ஒரு சிறுவன் நன்றாக நடனம் ஆடினால் ‘குட்டி மைக்கேல் ஜாக்ஸன் ’ என்று அழைக்கப் படும் அளவுக்கு அவரது புகழ் பரவியிருந்தது. ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு ஜான் லெனனையோ, பாப் மார்லேயையோ தெரியுமா? உலகில் உள்ள நூற்றுக் கணக்கான பாடகர்களையும், நடனக்காரர்களையும் மீறி மைக்கேல் ஜாக்ஸன் என்ற ஒரே ஒருவர் மட்டும் இவ்வளவு பிரபலம் அடைந்ததற்குக் காரணம் என்ன
?
மைக்கேலின் குரலிலும் நடனத்திலும் இருந்த மேஜிக்தான் காரணம். ’ பில்லி ஜீன் ’ என்ற பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டத்தில் யாராலும் நம்பவே முடியாத ‘மூன்வாக் ’ கை நடந்து காண்பித்தார். 1983-இல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவர் இந்த நிலவு நடையை நடந்து காண்பித்ததை உலகம் பூராவும் 5 கோடி பேர் பார்த்தார்கள். நிலவில் நடப்பதைப் போன்ற இந்த நடையை இவருக்கு முன்பே ஓரிரண்டு ஆட்டக்காரர்கள் ஆடியிருந்த போதிலும் மைக்கேல் ஆடிய போதுதான் இது உலக அளவில் பிரபலமாகியது. முன்னோக்கி நடக்கும் ஆட்டக்காரர் ஏதோ ஒரு விசையால் பின்னோக்கி இழுக்கப் படுவதைப் போல் தோற்றம் தரக் கூடியதாக ஒரு கால் பின்னோக்கி நகரும் இந்த நிலவு நடையை மைக்கேல் மேடையில் நிகழ்த்திக் காண்பிக்கும் போது இதைப் பார்க்கும் அத்தனை பேருமே ஒரு பித்தநிலைக்குப் போவதைக் காணலாம். அதோடு இந்தப் பாடலில் அவர் அவ்வப்போது கொடுக்கும் விக்கல் ஒலியும் பிரசித்தமானது.
’ The Way You Make Me
Feel’ என்ற பாடல் இளைஞர்களுக்கானது. அது ஒரு காதல் பாடல். காதலிக்கும் போது நீ நீயாக இரு என்பது செய்தி. அந்தப் பாடலிலும் காண்பவர்களை வசியம் செய்யும் விதத்தில் முன்னங்கால்களைத் தேய்த்துத் தேய்த்து நடப்பார் மைக்கேல்
.
மைக்கேல் தன்னுடைய எல்லாப் பாடல்களிலுமே ஒரு சுவாரசியமான கதை சொன்னார். அல்லது, உலக சமாதானம் குறித்த தனது அரசியல் கருத்துக்களை மிகக் காத்திரமாகப் பதிவு செய்தார். கதைகளில் மாயாஜாலக் கதை, சாகசக் கதை, பேய்க் கதை (த்ரில்லர்), சயன்ஸ் ஃபிக்‌ஷன் கதை (ஸ்மூத் க்ரிமினல்), கார்ட்டூன் பொம்மைக் கதை ( Speed Demon) என்று பலவிதமான கதைகளைப் புனைந்தார். அவர் சொன்ன கதைகளும் உலக அளவில் சிறுவர்களை ஈர்த்ததற்கு மற்றொரு காரணம்
.
’Remember the Time’ என்று ஒரு பாடல். எகிப்திய மன்னன் ராம்ஸேஸ் (நடிப்பு: எட்டி மர்ஃபி) மது அருந்திக் கொண்டிருக்கிறான். அரசிக்கு ஒரே அலுப்பாக இருக்கிறது. “என் ஃபேரோ தன்னுடைய அரசிக்காக கேளிக்கை காண்பிப்பானா?“ என்று கேட்கிறாள். குச்சிகளை வைத்து வித்தை காட்டும் ஒருவன் வந்து தன் திறமையைக் காட்டுகிறான். அரண்மனையின் பணிப்பெண்கள்தான் அதை ரசிக்கிறார்கள். அரசிக்கு எரிச்சல் வருகிறது
.
” இதெல்லாம் ஒரு கேளிக்கையா? இவனை சிங்கத்துக்கு இரையாக்குங்கள் ” என்கிறாள். அடுத்து வருபவன் தீயை விழுங்குபவன். அவன் சிரச்சேதம் செய்யப் படுகிறான்.
அடுத்து, முகத்திலிருந்து கால் வரை முக்காடு இட்ட ஒரு உருவம் வருகிறது. அது தரையில் ஒரு பொடியைத் தூவி விட்டு அதன் மேல் நிற்கிறது. உடனே அந்த உருவம் மறைந்து அந்த முக்காடு மட்டுமே தரையில் விழுகிறது. அரசி முதல் முதலாக ஆச்சரியம் கொள்கிறாள். பிறகு அந்த இடத்திலிருந்து ஜொலிக்கும் ஆணழகன் ஒருவன் முளைக்கிறான். அவளை வசீகரிக்கும் ஆட்டத்துடன் ஒரு பாடலைப் பாடுகிறான். அந்தப் பாடல் அவளைக் கால எந்திரத்தில் 3500 ஆண்டுகள் முன்னோக்கி இழுத்துச் செல்கிறது. “நாம் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தோம்; அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? கைகளைக் கோர்த்தபடி கடற்கரைகளில் உலா வந்தோம். இரவும் பகலும் தொலைபேசியில் பேசினோம். எல்லாம் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்ததே, ஏன்? உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா பெண்ணே
?”
இதைக் கேட்டுக் கடுங்கோபம் அடையும் ஃபேரோ அவனைக் கொல்லும்படி ஆணையிட, சேவகர்களால் அந்த ஆட்டக்காரனைப் பிடிக்கவே முடியவில்லை. அவன் ஒரு மந்திரவாதி. பிடித்தால் காற்றாய்க் கரைந்து வேறோர் இடத்துக்குப் போய் அங்கிருந்து ஆடுகிறான்; அரசியிடம் தனது பழைய காதல் கதைகளைப் பாடி அவளை மயக்குகிறான். கடைசியில் ஃபேரோவும் அவனுடைய சேவகர்களும் அவனை நான்கு பக்கமும் சூழ்ந்து கொள்ளும் போது அவன் திரும்பவும் பழையபடியே மந்திரத் தூளாக மாறி காற்றில் கலந்து விடுகிறான்.
***
மைக்கேலின் வாழ்க்கையைப் பற்றிய ’ ஜாக்ஸன்ஸ்: ஓர் அமெரிக்கக் கனவு ’ என்ற ஐந்து மணி நேரப் படம் 1992-இல் ஒளிபரப்பப் பட்டது. அவரது தாய் கேதரீனின் ’ என் குடும்பம் ’ என்ற சுய சரிதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் மைக்கேலின் இளமைக் காலத்தையும், அவர் ஒரு இசைக் கலைஞராக உருவானதன் பின்னணியையும் புரிந்து கொள்ளப் பெருமளவுக்கு உதவக் கூடியதாக இருக்கிறது இத்திரைப்படம்.
மைக்கேலின் தந்தை மிகக் கொடூரமானவராக இருந்ததாகவும், அவர் மைக்கேலை பலவிதமாகத் துன்புறுத்தியதுதான் அவரது பிற்கால வாழ்வை வெகுவாக பாதித்ததாகவும் பல பத்திரிகையாளர்கள் எழுதி வருவதுண்டு. ஆனால்
,
1950களில் அமெரிக்காவில் ஒரு காதல் ஜோடி முத்தம் கொடுத்துக் கொள்வது கூட வரம்பு மீறிய செயலாகக் கருதப் பட்டது. அப்படிப்பட்ட கால கட்டத்தில், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒரு கடைநிலைத் தொழிலாளி தன் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்வார்? அது மட்டும் அல்லாமல், மைக்கேலின் தந்தை ஜோசஃப் ஒரு தோற்றுப் போன இசைக் கலைஞன். அதனாலேயே தன்னுடைய புதல்வர்கள் பெரும் இசைக் கலைஞர்களாக வர வேண்டும் என்று கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். அந்தச் சிறுவர்கள் அவரைப் போலவே இசையில் அதீதமான திறமையைக் கொண்டிருந்ததும் அப்படி அவர் கடுமையான பயிற்சி அளித்ததற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.


உதாரணமாக, மைக்கேலின் மூத்த சகோதரர்கள் நால்வரும் நடனம், பாடல் மற்றும் இசைக் கருவிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது மைக்கேலை தந்தை ஜோசஃப் தங்கள் பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளவில்லை. ‘நீ சிறுவன் ’ என்று சொல்லி மறுத்து விடுகிறார். அப்போது மைக்கேலின் வயது நான்கு. பிறகு ஆறு வயதில் ஆரம்பப் பாடசாலையின் பாடல் போட்டியில் மைக்கேல் முதல் பரிசு வாங்கியதும்தான் அவனையும் தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறார். அதுவும் பாடகனாக அல்ல; ட்ரம்ஸ் வாசிப்பவனாக. பிறகு ஏழு வயதில்தான் மேடையில் ’ ஜாக்ஸன் 5 ’ குழுவில் பாட ஆரம்பித்தார் மைக்கேல்
.
கேத்ரீனின் புத்தகத்தையும், அதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மைக்கேலின் சரிதம் பற்றிய இந்தப் படத்தையும் பார்த்தால் மைக்கேலின் தந்தை அந்தக் கால கட்டத்தில் இருந்த ஒரு வழக்கமான தந்தையாகத்தான் இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல், மைக்கேல் மற்றும் அவருடைய மூத்த சகோதரர்களின் இசைப் பயிற்சிக்காகவும், அவர்களது திறமை வெளியுலகத்துக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் மைக்கேலின் தந்தை ஜோசஃப் தன்னுடைய சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறார்.
ஏழு
பிள்ளைகளும் மனைவியும் சேர்ந்து மொத்தம் ஒன்பது பேருக்கு ஒரே ஒரு சிறிய அறையைக் கொண்ட வீட்டில் வாழ்ந்தபடி தன் பிள்ளைகளின் இசைப் பயிற்சிக்காகவும், பிறகு அவர்களைக் கொண்டு தான் அமைத்த ’ ஜாக்ஸன் 5 ’ இசைக் குழுவுக்காகவும் ஒருமுறை பெரும் அளவிலான இசைச் சாதனங்களை வாங்கி வருகிறார் ஜோசஃப்
.
நீ என்ன பைத்தியமா? ” என்று கேட்டு சண்டை பிடிக்கும் கேதரீனின் ஆட்சேபணைகளை அவர் பொருட்படுத்துவதே இல்லை. அவரைப் பொறுத்தவரை, தன் குழந்தைகளின் இசைக் குழு நாடெங்கும் பிரபலமாக வேண்டும். அவருடைய இந்தக் கனவு ‘ஜாக்ஸன் 5 ’ இசைக் குழு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே நிறைவேறி விடுகிறது. தாங்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்திலும் பரிசுகளைக் குவிக்கிறார்கள் ஜோஸஃபின் குழந்தைகள். ஒன்பது வயதிலேயே மைக்கேலுக்கு ஒரு பிரபல பாடகனுக்குக்கு உரிய அந்தஸ்து கிடைத்து விடுகிறது. மைக்கேல் மேடையில் பாடும் போது இப்போது பார்வையாளர்களிடம் நாம் கண்ட அதே பித்துப் பிடித்த எதிர்வினையையே அப்போதும் பார்க்க முடிகிறது. இதற்கு மைக்கேலின் திறமை தவிர, ஜோஸஃபின் இடைவிடாத உழைப்பும், தன் குழந்தைகள் மீது அவர் வைத்த தீவிர நம்பிக்கையும்தான் காரணம். இதற்காக ஜோஸஃப் தன் மகன்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். நடனத்தில் ஒரு அடி பிசகினாலும் பெல்ட்டால் அடித்தார். இதைத்தான் இப்போது பல விமர்சகர்கள் மிகவும் அசாதாரணமான விஷயமாகக் கருதி எழுதுகின்றனர். இதெல்லாம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கிராமப் புறங்களில் இன்றைக்கும் காணக் கூடிய அன்றாட நிகழ்வுகளாய் இருப்பது இந்த மேற்கத்திய விமர்சகர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய விமர்சகர்களும் இதே பல்லவியைப் பாடலாமா என்பது ஒரு கேள்வி
.
இசையிலும் நடனத்திலும் தான் கொடுக்கும் கடும் பயிற்சிகளுக்காக ஜோஸஃப் தன் மகன்களை மற்ற பையன்களைப் போல் விளையாட அனுமதிக்கவில்லை. ஓய்வெடுக்க விடவில்லை. இரவும் பகலும் எந்நேரமும் பயிற்சியிலேயே அவர்களை ஈடுபட வைத்தார். அதனால்தான் அப்போது உலக அளவில் முன்னணிப் பாடகியாக இருந்த டயானா ராஸ் ஒன்பதே வயதான மைக்கேலுடன் மேடையில் ஒன்றாகப் பாடினார். மைக்கேலின் வாழ்க்கையில் நடந்த அந்த மிக முக்கியமான சம்பவம் உலகின் பிரசித்தி பெற்ற இசை அரங்குகளில் ஒன்றான அப்பல்லோ தியேட்டரில் (நியூயார்க்) நடந்தது
.
’ ஜாக்ஸன் 5 ’ குழுவின் முதல் ஆல்பத்தை வெளியிட்டவரும் டயானா ராஸ் தான்
.
ஆனால் இந்த இடத்தை அடைவதற்காக மைக்கேல் இழந்தது மிகவும் அதிகம். “இரவு இரண்டு மணிக்கு என் அப்பா எங்களை எழுப்புவார். மூன்று மணிக்கு ஏதாவது ஒரு க்ளப்பில் இசை நிகழ்ச்சி இருக்கும். இப்படி எல்லா அமெரிக்க நகரங்களிலும் பாடி இருக்கிறேன். அப்போது என் வயது ஏழு இருக்கும் ” என்கிறார் மைக்கேல்
.
அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் மைக்கேலின் வாழ்வில் அவருடைய அம்மாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து விட்டார் டயானா ராஸ். தன் அம்மாவுக்குப் பிறகு தன் குழந்தைகளை வளர்க்கும் உரிமை டயானா ராஸுக்கு மட்டுமே உண்டு என்று உயில் எழுதி வைத்துள்ளார் மைக்கேல். அதே சமயம், தன் அம்மாவுக்கு முன்பு தான் இறக்க நேர்ந்தாலும் தன் குழந்தைகளை வளர்க்கும் உரிமை டயானாவுக்கு மட்டுமே உண்டு என்று உயிலில் குறிப்பிடுகிறார் மைக்கேல். அந்த உரிமையை அவர் தன் அம்மா கேதரீனுக்குக் கூடக் கொடுக்கவில்லை. டயானாவும் மைக்கேலைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘மை பேபி மைக்கேல் ஜாக்ஸன் ’ என்றே சொல்வது வழக்கம்
.
ஜாக்ஸன் 5 ’ குழுவின் முதல் ஆல்பத்தை டயானா ராஸ் வெளியிட்ட பிறகு டயானா ராஸும் மைக்கேலும் தொடர்ந்து பல மேடைகளில் ஒன்றாகப் பாடினார்கள். உலகின் முன்னணிப் பாடகி ஒருவர் பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுவனைத் தன்னுடைய ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாட அழைத்தார் என்றால் மைக்கேலின் திறமையை நாம் புரிந்து கொள்ளலாம்.
மைக்கேலின் வாழ்வைப் புரிந்து கொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் ஆவணங்கள் அதிகம். அதில் குறிப்பிடத் தகுந்த ஒன்று Paul Theroux தற்போது
மைக்கேல் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் இன்னும் தலைப்பிடப்படாத புத்தகம். அதில் அவர் ஒருநாள் அதிகாலை நான்கு மணி அளவில் மைக்கேல் அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியது பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார்.
பால் தெரோ ஒரு புகழ்பெற்ற பயண எழுத்தாளர், நாவலாசிரியர். உலகின் பல நாடுகளை ரயிலிலேயே சென்று புத்தகங்கள் எழுதுபவர். ஒருமுறை உலகம் முழுவதுமே ரயிலில் சென்று ’ தெ க்ரேட் ரயில்வே பஸார் ’ என்ற சுவாரசியமான புத்தகத்தை எழுதியிருக்கிறார்.



முதலில் இவர் மைக்கேலை அவரது நெவர்லேண்ட் வீட்டில் சந்தித்தது பற்றிக் கூறுகிறார். நெவர்லேண்ட் 3000 ஏக்கரில் அமைக்கப்பட்ட ஒரு கனவு உலகம். மாயாஜாலக் கதைகளில் மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு அற்புத உலகம். மலைப்பாம்பு, நாகப் பாம்பு, தவளை, நாய், ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, யானை ( இது எலிஸபெத் டெய்லர் மைக்கேலுக்குப் பரிசாகக் கொடுத்தது), உராங் உடாங், மைக்கேலின் அறைத் தோழனாக இருந்த பபிள்ஸ் என்ற சிம்பன்ஸி ( எலிஸபெத் டெய்லரை முதல்முதலாகப் பார்க்கச் சென்றபோது கூட மைக்கேல் இந்த சிம்பன்ஸியோடுதான் சென்றார்), சிங்கம், புலி, கரடி என்று பலவிதமான மிருகங்களும், ராட்சசக் குடை ராட்டினங்கள், பொம்மை வீடுகள், கேளிக்கை ரயில் போன்று ஒரு சிறுவர் கண்காட்சியில் காணக் கூடிய எல்லா விஷயங்களும் இங்கே இருந்தன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு ரயில் வசதியும், ஒரு ரயில்வே நிலையமும் கூட (கேதரீன் ரயில்வே ஸ்டேஷன்) இங்கே அமைக்கப் பட்டிருந்தன.
இது
தவிர, அங்கே நான்கு பேரின் புகைப்படங்கள் மாட்டப் பட்டிருந்தன. எலிஸபெத் டெய்லர், டயானா ராஸ், மர்லின் மன்றோ, சார்லி சாப்ளின். அந்த நெவர்லேண்ட் கனவுலகத்தில் இருந்த இன்னொரு படம், பீட்டர்
.
J.M. Barrie எழுதிய ’ பீட்டரும் வெண்டியும் ’ என்ற சிறுவர் சாகசக் கதையில் வரும் பீட்டர் என்ற கதாபாத்திரத்தைத்தான் மைக்கேல் தனது ஆதர்ஸமாகக் கொண்டிருந்தார். பீட்டர் தன்னுடைய உயிர்த் தோழியான வெண்டியை அழைத்துக் கொண்டு நெவர்லேண்ட் என்ற கனவுலகத்துக்குப் பறந்து சென்று ஏதேதோ சாகசங்களைச் செய்கிறான். பீட்டரின் விசேஷம் என்னவென்றால், அவன் பெரிய ஆளாக வளராமல் எப்போதும் சிறுவனாகவே இருப்பான்.
இதே
மனநிலையைத்தான் மைக்கேலும் கொண்டிருந்தார். ஒரு 12 வயதுச் சிறுவனின் மனநிலையை மைக்கேல் தன் வாழ்நாளில் தாண்டியதில்லை என்றே சொல்லலாம். அவருடைய ‘குழந்தைப் பருவம் ’ என்ற பாடலைப் பாருங்கள்:
Have you seen my
Childhood?
I'm searching for the world that I come from
'Cause I've been
looking around
In the lost and found of my heart...
No one understands
me
They view it as such strange eccentricities...
'Cause I keep kidding
around
Like a child, but pardon me...
People say I'm not
okay
'Cause I love such elementary things...
It's been my fate to
compensate,
for the ChildhoodI've never known...
Have you seen my
Childhood?
I'm searching for that wonder in my youth
Like pirates and
adventurous dreams,
Of conquest and kings on the throne...
Before you
judge me, try hard to love me,
Look within your heart then ask,
Have you
seen my Childhood?
1993- இல் மைக்கேலுக்கு 13-ஆவது முறையாக க்ராமி பரிசு வழங்கப்பட்ட போது அவருடைய ஏற்புரை
:
கடந்த மாதம் இருந்த ‘எங்கே
?
’ என்று நிலையிலிருந்து இப்போது ‘இங்கே ’ என்று நிலைமைக்கு வந்திருக்கிறேன். ஆனால் என்னை நீங்கள் ஒரு ஆளுமை என்று சொல்வதை விட ஒரு ஆள் என்று சொன்னால்தான் எனக்குப் பிடிக்கும். ஏனென்றால், என்னைப் பற்றி எழுதப் படும் எல்லாவற்றையும் நான் படிப்பதில்லை. என்னை ஒரு வினோதமான ( weird and bizarre) பிறவி என்று உலகம் நினைப்பது பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் என்னைப் போல் ஐந்து வயதிலிருந்து பத்து கோடி மக்களின் பார்வைக்கு முன்னால் வளரும் யாருமே வித்தியாசமான ஒருவராகவே இருப்பார். அதுதான் இயல்பு. கடந்த சில வாரங்களாக நான் என்னை சுத்திகரித்துக் கொள்ளும் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். இது எனக்கு ஒரு மறுபிறவி மாதிரியே தோன்றுகிறது.
என்னுடைய குழந்தைப் பருவம் என்னிடமிருந்து முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு விட்டது. கிறிஸ்துமஸ் கிடையாது; பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கிடையாது; அது ஒரு முறையான குழந்தைப் பருவமாக இல்லை. ஒரு குழந்தைக்குக் கிடைத்திருக்க வேண்டிய எந்த சந்தோஷமும் எனக்குக் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக மிகக் கடுமையான பயிற்சி, போராட்டம், வலி பின்னர் அதன் விளைவான லௌகீக லாபமும், தொழில்ரீதியான வெற்றியும் கிட்டியது. ஆனால் அதற்காக நான் கொடுத்த பயங்கரமான விலை – அதை எதனாலும் எனக்குத் திருப்பிக் கொடுக்க முடியாது. என் வாழ்வின் அந்தப் பகுதியை என்னால் என்ன செய்தாலும் திரும்ப வாழ முடியாது. இருந்தாலும், இன்று, என்னுடைய இசையை சிருஷ்டிக்கும் போது, நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம்முடைய இதயங்களைத் திறந்து காட்டும் போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை எண்ணும் போது நான் பரவசமடைகிறேன். சம்மதத்தின் சப்தம் இந்தப் பிரபஞ்சத்தின் ஊடாகவும், எல்லா உலகங்களின் ஊடாகவும் பொங்கிப் பிரவகித்து மாயாஜால நதியாய் ஓடுகிறது. அந்த அற்புதம் நமது இதயங்களை நிரப்புகிறது . வாழ்வின் கொண்டாட்டமும் குதூகலமும் ஒரு அற்புதமாக மின்னல்வெட்டைப் போல் ஒருக்கணம் நம் இதயங்களை நிரப்பும்.
michaeljackson-spy-hat-michaeljack sonmoon


அதன் காரணமாகவே நான் குழந்தைகளை நேசிக்கிறேன்; அவர்களோடு இருக்கும்போது நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்த உலகின் பல பிரச்சினைகள் – அது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்தில் நடக்கும் சிறு குற்றமாக இருந்தாலும் சரி, அல்லது, மிகப் பெரிய போர், பயங்கரவாதம், அளவுக்கதிமான கைதிகளால் நிரப்பப்படும் சிறைச்சாலைகள் என்று ஆனாலும் சரி – இது எல்லாவற்றுக்குமே காரணம் சிறார்களிடமிருந்து அவர்களின் குழந்தைப் பருவம் பறிக்கப்பட்டதுதான்.
அந்த மேஜிக், அந்த அற்புதம், ஒரு குழந்தையின் வெகுளித்தன்மை – இதுதான் சிருஷ்டிகரத் தன்மையின் விதைகள். அதுதான் இந்த உலகை சொஸ்தப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
குழந்தைகளிடமிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்? சிறுபிள்ளைத் தனத்தையா? இல்லை... அவர்களோடு இருந்தால் அது நம்மை இந்த வாழ்வில் எங்கும் நிறைந்திருக்கும் மிக உன்னதமான, மிக ஆழமான நீதியையும் அறத்தையும் நோக்கி இட்டுச் செல்லும். அந்த அறமும், நீதியும் அவற்றை வாழ்ந்து பார்க்கச் சொல்லி நம்மை அழைக்கிறது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகின் பிரச்சினைகளுக்கான தீர்வு நம்முடைய இதயத்திலே புதைந்து கிடக்கிறது; அதைக் குழந்தைகள்தான் நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள். நோயால் பீடிக்கப்பட்டும், வாழ்க்கையின் அனுகூலங்கள் கிடைக்கப் பெறாமலும் இருக்கும் குழந்தைகள் உட்பட இந்த உலகத்திலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இன்றைய தினம் நான் நன்றி கூறுகிறேன்... உங்களுடைய வலியும் வேதனையும் என்னை வெகுவாக பாதிக்கிறது.
***
குழந்தைப் பருவத்தை இழந்த ஒரு குழந்தையைப் போன்ற மைக்கேலின் இந்த மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாத சமூகம் தனது வக்கிரத்தையெல்லாம் அவர் மீது செலுத்தியது. சிறுவர்களோடு ஒரே கட்டிலில் படுத்திருந்தார் என்பதில் தொடங்கி, சிறுவர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கினார் என்பது வரை அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1983-இல் 13 வயது சிறுவன் ஒருவன் மைக்கேல் மீது இந்தக் குற்றச்சாட்டை வைத்தான். இதன் காரணமாக போலீஸ் மைக்கேலை நிர்வாணமாக்கி சிறுவன் சொன்ன அடையாளங்கள் அவரது ஆணுறுப்பில் உள்ளதா என்று சோதித்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவரை இப்படி நிர்வாணப்படுத்தி சோதித்தது போலீஸ். ஆனால் கடைசியில் அவர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மைக்கேலை வெகுவாக பாதித்ததால் அந்த மன உளைச்சலிலிருந்து வெளியே வர அவர் போதை மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தார்.
ஆனால் மைக்கேல் எப்படிப்பட்டவர் என்பதை பின்வரும் சம்பவத்திலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். மைக்கேலின் குழுவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் முதல்முறையாக நெவர்லேண்ட் செல்கிறார். வெளிவாசலிலிருந்து உள்ளே செல்லும் ரயிலில் ஏறி மைக்கேலின் வீட்டுக்குச் செல்கிறார். மூன்று அறைகளைக் கொண்ட சிறிய வீடு அது. வெளியிலிருந்து குரல் கொடுக்கிறார் நண்பர்
.
“யார் நீங்கள்? ” என்ற குரல் உள்ளிருந்து வருகிறது. அது மைக்கேலின் குரல். நண்பர் தன் பெயரைச் சொல்கிறார். ஆனால் “யார் நீங்கள்
?
” என்ற குரலே மீண்டும் கேட்கிறது. மைக்கேலின் நண்பர் மீண்டும் தன் பெயரைச் சொல்கிறார். ஆனால் அவர் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் மீண்டும் “யார் நீங்கள்
?
” என்ற குரல் கேட்டதும் நண்பருக்கு ஒரே குழப்பம். பதில் சொல்லாமல் திகைத்தபடி நிற்கும் போது மைக்கேல் சிரித்துக் கொண்டே வந்து கதவைத் திறக்கிறார். அப்போது அவர் அறையிலிருந்த பெரிய கிளி ஒன்று மைக்கேலின் குரலில் அந்த நண்பரைப் பார்த்து “யார் நீங்கள்
?
” என்று கேட்கிறது. இதிலுள்ள குழந்தைத் தன்மையும், கவித்துவமும் போலீஸ்காரர்களுக்கும், மைக்கேலிடமிருந்து தங்கள் குழந்தைகளை வைத்துப் பணம் பறிக்க நினைக்கும் பேராசை பிடித்த ஒருசில பெற்றோருக்கும் புரியுமா என்ன
?
ஆனால் மைக்கேலின் பாடல் வரிகளைத் தெரிந்தவர்களுக்கு அவருடைய குழந்தைப் பாசமும், மிருக நேயமும் ஆச்சரியமாக இருக்காது. அவர் சிறுவனாக இருந்தபோதே எலி வளர்த்திருக்கிறார். மேலும், அவர் ஒரு சைவ உணவுக்காரர். இது வெறும் உணவுப் பழக்கத்தால் அல்ல; உயிர்க் கொலை கூடாது என்ற அவருடைய ஜீவகாருண்ய நம்பிக்கையின் காரணமாக அவர் பின்பற்றிய வழக்கம் இது. இந்த உலகத்தில் அவர் மிக அதிகமாக நேசித்தது குழந்தைகளையும், மிருகங்களையும்தான். இதை அவருடைய பல பாடல்களில் காணலாம் என்றாலும் குறிப்பாக ‘Earth Song’ –
ஐ ஒரு உதாரணமாகக் கூறலாம். இந்தப் பாடலின் பின்வரும் பகுதியைக் கவனியுங்கள்:
Did you ever stop to
notice
All the children dead from war
Did you ever stop to notice
The
crying Earth the weeping shores…
What about animals
We've turned kingdoms to
dust
What about elephants
Have we lost their trust
What about crying
whales
We're ravaging the seas
What about forest trails
Burnt despite
our pleas அவருடைய ‘ Heal the World’ என்ற பாடலில் திமிங்கிலங்களை நாம் அழித்துக் கொண்டிருப்பது பற்றிய காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்.
மைக்கேலின் வாழ்வில் டயானா ராஸை விட அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த ஒருவர் எலிஸபெத் டெய்லர். “எங்களிடையே மேஜிக் போன்றதொரு உறவு இருந்தது ” என்கிறார் எலிஸபெத். மைக்கேலையும் தன்னையும் அவர் பீட்டர்/வெண்டி என்றும் சொல்லிக் கொள்வதுண்டு. மைக்கேலின் வாழ்வைத் தனிமை சூழ்ந்திருந்தது என்று சில விமர்சகர்கள் சொல்வதுண்டு. ஆனால் மைக்கேலுக்கும் எலிஸபெத்துக்கும் இருந்த உறவை வைத்துப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. “மைக்கேல் என்னுடைய உடலின் ஒரு பகுதி. நாங்கள் இருவருமே ஒருவருக்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்வோம் ” என்கிறார் எலிஸபெத்
.
எலிஸபெத்துக்கும் தனக்கும் உள்ள உறவு பற்றி மைக்கேல் இவ்வாறு கூறுகிறார்:
” என்னுடைய துறையில் நீங்கள் யாரையுமே நம்ப முடியாது. யார் உங்களுடைய உண்மையான நண்பர் என்று கண்டு பிடிக்க முடியாது. நீங்கள் பிரபலமானவராக இருப்பதால் உங்களைச் சுற்றி எப்போதுமே ஆட்கள் இருந்து கொண்டிருப்பார்கள். ஆனாலும் நீங்கள் தனிமைப்பட்டே இருப்பீர்கள். பிரபலமான மனிதர் என்றால் நீங்கள் ஒரு சிறைக்கைதி என்று பொருள். சாதாரணமாக மற்றவர்களைப் போல் நீங்கள் வெளியே செல்ல முடியாது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை எல்லோரும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன படிக்கிறீர்கள், என்ன வாங்குகிறீர்கள்... எல்லாமே அவர்களுக்குத் தெரிய வேண்டும். எப்போதுமே உங்களுக்குப் பின்னே ஒரு பத்திரிகையாளர் கூட்டம் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். அவர்கள் என்னுடைய அந்தரங்க வாழ்க்கையில் ஊடுருவுகிறார்கள். அவர்கள் எதார்த்தத்தைத் திரித்து எழுதுகிறார்கள். அவர்கள்தான் என் வாழ்வின் கொடுங்கனவு. இப்படிப்பட்ட சூழலில் நான் எலிஸபெத்தை மட்டுமே நம்புகிறேன்.
அவர் எனக்கு அம்மா மாதிரி. ம்ஹும். தோழி. இல்லை; அதை விட அதிகம். அவர் என்னுடைய மதர் தெரஸா; என்னுடைய இளவரசி டயானா, என்னுடைய வெண்டி... அவர் என் அருகில் இருப்பதே ஒரு அற்புதம் போல் தோன்றுகிறது. அவர் பக்கத்தில் மட்டுமே நான் பாதுகாப்பாக உணர்கிறேன்; ஏனென்றால் எங்கள் இருவரின் இளமைக் காலமும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது. அதாவது, குழந்தை நட்சத்திரங்களாக வாழ்வதன் சோகம் நிரம்பிய வாழ்க்கை எங்களுடையது. எங்கள் இருவரின் அனுபவங்களும் ஒரே மாதிரியானவை ” என்கிறார் மைக்கேல்
.
தன்னுடைய ‘பிராபல்யம் ’ பற்றி மைக்கேல் மேலும் கூறுகிறார்: “அது உங்களை மிக வினோதமான விஷயங்களைச் செய்ய வைக்கிறது. புகழ் ஒரு போதை. இந்தப் போதையால் பலர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதை சமாளிக்கத் தெரியவில்லை. ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு உங்களுடைய சுரப்பி பிரபஞ்ச விளிம்புக்குச் சென்று விடும். அந்தக் கைத்தட்டல் ஓசை உங்களை நிலத்திலிருந்து மேலே தூக்கி மிதக்க வைக்கும். உங்களால் தூங்க முடியாது. இரவு இரண்டு மணி ஆகி விடும். ஆனாலும் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருப்பீர்கள். நான் இதை வாசிப்பின் மூலம் கடக்க முயல்வேன். ஸாமர்ஸெட் மாம், மார்க் ட்வெய்ன், வால்ட் விட்மன், ஹெமிங்வே இவர்களெல்லாம் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள். இல்லாவிட்டால் விடியோ கேம்ஸ் ஆடுவேன்
.
***
மைக்கேல் பற்றிய மற்றொரு முக்கியமான ஆவணப் படம் Living With Michael Jackson.
பிரிட்டிஷ் பத்திரிகையாளரான மார்ட்டின் பஷீர் மைக்கேல் ஜாக்ஸனை மே
2002 இலிருந்து ஜனவரி 2003 வரை எட்டு மாத இடைவெளியில் பேட்டி கண்டு எடுத்த படம் இது
.
துரதிர்ஷ்டவசமாக அந்த ஆவணப் படத்தை எடுத்த பஷீர், அவருக்கு விருப்பமான விதத்தில் வெட்டி, ஒட்டி மைக்கேலைப் பற்றி மிகத் தவறான ஒரு பிம்பத்தை உருவாக்கும் விதமாக வெளியிட்டு விட்டார். பஷீருக்கு எதிராக மைக்கேல் வழக்குத் தொடுத்தார். ஆனால் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, மைக்கேலின் அந்தக் குறிப்பிட்ட பேட்டியையே ஆதாரமாக வைத்து அவர் மீது கடுங்காவல் தண்டனைக்குரிய பத்து குற்றங்கள் சுமத்தப் பட்டன. மைக்கேல் எந்த அளவுக்கு ஒரு குழந்தையைப் போல் வெகுளியானவர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்
.
மூன்று ஆட்கள் வட்டமாக நின்று கைகளை விரித்தால் தொட்டுக் கொள்ளக் கூடிய அளவுக்கு அகலமும், வானளாவிய உயரமும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான மரத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்திருக்கிறார்
மைக்கேல். கீழே சாலைகளும், வாகனங்களும் பொம்மைகளைப் போல் தோற்றம் கொள்கின்றன. பஷீரும் அந்த மரத்தின் மீது ஏற முயற்சி செய்து முடியாமல் பாதியிலேயே ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு மைக்கேலிடம் பேசுகிறார். “உங்களுக்கு மரம் ஏறத் தெரியாதா
?
” என்று பஷீரை ஆச்சரியத்துடன் கேட்கும் மைக்கேல் ” மரம் ஏறுவது எனக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு ” என்கிறார். ’ லிவிங் வித் மைக்கேல் ஜாக்ஸன் ’ இப்படியாகத் தொடங்குகிறது.
***
மைக்கேல் ஜாக்ஸனின் பாடல்களைப் பற்றி என்ன எழுதுவது என்று தெரியவில்லை. அது ஒரு அனுபவம். எக்ஸ்டஸி என்று சொல்லலாம். அல்லது மேஜிக். அவருடைய ‘பில்லி ஜீன் ’ என்ற பாடலில் சாலையோரத்தில் ஒரு பிச்சைக்காரர் படுத்திருப்பார். அவருடைய குவளையில் மைக்கேல் ஒரு நாணயத்தைச் சுண்டி எறிவார். அது குவளையில் விழுந்ததும் குவளை தங்கக் குவளையாக மாறும். அந்தப் பிச்சைக்காரரும் கோடீஸ்வரராக மாறுவார். அத்தகைய மேஜிக்கைக் கொண்டது மைக்கேலின் பாடல்கள். என்றாலும் அதை சொற்களால் விளக்க முற்படுவது கடினம்தான். அவரது நிகழ்ச்சியைக் காண்பதற்காகக் குவியும் லட்சக் கணக்கான மக்களுக்கு என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியும். அவருடைய குரலுக்கும், நடனத்துக்கும் அத்தகைய வசியத் தன்மை இருந்தது. கேட்பவர்களையும், காண்பவர்களையும் ஒருவித பித்தநிலைக்குக் கொண்டு செல்கின்றன அவை. அதனால்தான் அவருடைய ’ ப்ளாக் அண்ட் ஒய்ட் ’ என்ற விடியோ ஒரே நேரத்தில் 27 தேசங்களில் ஒளிபரப்பப் பட்டது
.
50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். இதுதான் உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சி.
இந்த விடியோவை எடுத்த இயக்குனருக்கு மைக்கேலும் இந்தப் பாடலில் பங்கேற்ற குழந்தைகளும் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு விருந்து கொடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆர்வத்துடன் அமர்ந்திருக்கிறார் இயக்குனர். குழந்தைகளும் மைக்கேலும் இயக்குனர் மீது எக்கச்சக்கமான ஐஸ்க்ரீமைக் கொட்டுகிறார்கள். ஒரு ஐஸ்க்ரீம் மழையே அவர் மீது பொழிகிறது.
இன
ஒற்றுமையை வலியுறுத்தும் ’ ப்ளாக் ஆர் ஒய்ட் ’ என்ற இந்தப் பாடலில் இடம் பெறும் நடனம் ஹார்ட் ராக் மற்றும் Rap வகையைச் சேர்ந்தது. 11 நிமிடம் கொண்ட இந்தப் பாடல், குடும்பங்களில் குழந்தைகள் எத்தகைய அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பதைப் பேசுகிறது. அப்பா கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறான் அவருடைய ஐந்து வயது மகன்
.
“நேரமாகி விட்டது; போய்த் தூங்கு ” என்று திட்டுகிறார். உடனே அந்தப் பையன் மிக அதிக சப்தத்தில் பாடலைப் போட, அதன் வேகத்தில் அடித்துக் கொண்டு போகும் அப்பா வேறோர் இடத்துக்குத் தூக்கிச் செல்லப் படுகிறார். அங்கே சிங்கங்கள் உறும, ஆதிவாசிகளோடு நடனமாடிக் கொண்டிருக்கிறார் மைக்கேல்
.
மேலும் இந்தப் பாடலில் இடம் பெறும் தாய்லாந்து, இந்திய, ஜப்பானிய நடனங்களும் அதற்கு ஏற்ப மைக்கேல் ஆடுவதும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு காட்சியில் செவ்விந்தியப் பழங்குடியினருக்கும், மற்றொரு இனத்துக்கும் கடும் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது மைக்கேல் ஒரு குழந்தையுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். இதன் மூலமாக மைக்கேல் முன்வைக்கும் அரசியல் என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும்
.
பாடலின் இரண்டாவது பகுதியில் ஒரு கறுஞ்சிறுத்தையாக உள்ளே நுழையும் மைக்கேல், பிறகு மைக்கேலாக மாறி நான்கரை நிமிடங்களுக்கு எந்தப் பக்க வாத்தியப் பின்னணியும் இல்லாமல் ஒரு அற்புதமான நடனத்தை ஆடுகிறார். கறுப்பின மக்களின் அத்தனை சீற்றத்தையும் வெளிப்படுத்தும் மிகக் கடுமையான ஆட்டம் அது. மைக்கேலின் ‘நிலவு நடை ’ க்கு அடுத்தபடியாக என்னை மிகவும் கவர்ந்த ஒரு ஆட்டம் இது. இனவாதத்தை முன்வைக்கும் அத்தனை இடங்களும் மைக்கேலின் நடனத்தின் சீற்றம் தாங்க முடியாமல் பற்றி எரிகின்றன. மைக்கேல் வெறும் ஒரு பாடகரோ அல்லது நடனக்காரரோ மட்டும் அல்ல; அவர் ஒரு புரட்சிகரமான அரசியலைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்தார் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம்
.
மைக்கேலின் அரசியல் பற்றி அவ்வளவாக யாரும் எழுதுவதில்லை. அவருடைய பாடல் வரிகளும், பாடலில் வரும் காட்சிகளுமே அவர் முன்வைக்கும் அரசியலைத் தெளிவாகச் சொல்லுகின்றன. அவருடைய முக்கியமான பாடல்களில் ஒன்றான ‘மேன் இன் தெ மிரர் ’ –
இல் வரும் காட்சிப் படிமங்கள்: நெல்சன் மண்டேலா, காந்தி, மார்ட்டின் லூதர் கிங், மதர் தெரஸா, எலும்புக் கூடுகளைப் போல் தோற்றமளிக்கும் ஆஃப்ரிக்க அகதிகள், போராட்டங்கள், போலீஸ் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகைகுண்டு வீச்சு, போர்க் காட்சிகள், டாங்கிகள், போரினால் உடல் பாகங்களை இழந்து மருத்துவமனையில் கிடக்கும் குழந்தைகள், இன வாதத்தை ஆதரிக்கும் சுவரொட்டிகள், ஹிட்லரின் ஆவேசமான பேச்சு, வீடு இல்லாமல் தெருவோரங்களில் வசிக்கும் பெருநகரத்து அனாதைகள், டாங்கிக்கு முன்னே ஓடும் ஒரு சிறுமி
,
Farms Not Arms என்ற வாசகம் தாங்கிய சுவரொட்டி, ஜான் லெனனின் புகைப்படத்துடன் 8 டிசம்பர் 1980 என்று எழுதப்பட்ட அட்டை (அது ஜான் லெனன் கொல்லப் பட்ட தினம்), செர்னோபில் விபத்து, அணு ஆயுதப் பேரழிவுகள், நாஜி ராணுவத்தின் அணிவகுப்பு என்று கிட்டத்தட்ட 20-ஆம் நூற்றாண்டின் அரசியல் வரலாறே இந்தப் பாடல் காட்சிகளில் காண்பிக்கப் படுகிறது
.
மைக்கேலின் அரசியல் பற்றிப் பேசும் போது பொதுவாக எல்லா ஊடகத்தினாலும் எழுத்தாளர்களாலும் பேசப் படாத வேறோர் விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அது, மைக்கேலின் மத மாற்றம். அவர் நவம்பர் 2008-இல் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறினார். நவம்பர் 2003-இல் ஒரு சிறுவனை பாலியல் ரீதியாக உபயோகப் படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டு மைக்கேல் சிறைக்குச் சென்ற போதுதான் அவர் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறுவதாகப் பேச்சு எழுந்தது. பின்னர்
,
2005-இல் அவர் நிரபராதி என்று தீர்ப்பு கிடைத்ததுமே அவர் பஹ்ரைனுக்குக் குடி பெயர்ந்தார். இதற்கு மைக்கேலுக்கு உதவிகரமாக இருந்தவர் பஹ்ரைனின் இளவரசர்
.

மைக்கேலின் மத மாற்றத்துக்குக் காரணமாக இருந்தது, அமெரிக்காவின் ஆன்மீக வீழ்ச்சிதான். இங்கே நான் குறிப்பிடுவது மதிப்பீடுகளின் வீழ்ச்சி. பணத்துக்காகவே மைக்கேல் மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அது மட்டும் அல்லாமல், கறுப்பின மக்கள் மீது தொடர்ந்து அமெரிக்க சமூகம் ஒரு வன்மமான பழி தீர்க்கும் பகைமை உணர்வையே கொண்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு சமயம் ஒரு மாநிலத்தின் நீதிபதி ஒருவர் ஒரு பெண்ணை வன்கலவி செய்து விட்டதால் கைது செய்யப் பட்டார். அதே நேரத்தில் ஒரு குத்துச் சண்டை வீரர் ஒரு ஈவ் டீசிங் வழக்கில் கைதானார். ஆனால் ஊடகங்களில் அந்தக் குத்துச் சண்டைக்காரரின் செய்தியே பிரதான இடம் பெற்றிருந்தது. காரணம், நீதிபதி வெள்ளைக்காரர்; குத்துச் சண்டை வீரர் கறுப்பர்
.
அமெரிக்க சமூகம் இன வேற்றுமையை ஒழித்து விட்டதாக உலகத்துக்குச் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்தச் சமூகத்தின் வெள்ளை இனத்தவரிடையே இன்னமும் ஆழமாக இனவெறி ஊறிக் கிடக்கிறது. ஒரு கறுப்பன் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டால் ’ இதுதான் உன்னுடைய தன்மை; நீ இன்னும் மிருக நிலையிலிருந்து முன்னேற்றம் அடையவில்லை; உன் முகம் மிருகத்தைப் போல் இருக்கிறது. உன் நிறம் மிருகத்தைப் போல் இருக்கிறது; உன் தலைமுடி மிருகத்தைப் போல் இருக்கிறது. நீ உன்னுடைய தாய்பூமியான ஆஃப்ரிக்காவுக்கே திரும்பிப் போ. நீ இன்னும் மனிதனாக வளர்ச்சி அடையவில்லை. அதனால்தான் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுகிறாய் ’ என்று சொல்லாமல் சொல்லி அந்தக் கறுப்பின மனிதனை விளிம்புக்குத் தள்ளுகிறது அமெரிக்க வெள்ளைச் சமூகம். இதற்கு அமெரிக்க ஊடகங்களும் துணி போகின்றன. இல்லாவிட்டால் மால்கம் எக்ஸ் சிறையில் இருந்தபோது 1948-இல் ஏன் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறினார்
?
சரி, அது பழைய காலம் என்று எடுத்துக் கொண்டால் குத்துச் சண்டை வீரரான கேஷியஸ் க்ளே ஏன் முகம்மது அலியாக மாறினார்? அது நடந்தது 1965-இல். ஆஃப்ரோ அமெரிக்கர்களைப் பற்றி அமெரிக்க வெள்ளைச் சமூகம் கொண்டிருந்த மனோபாவம்தான் இதற்கெல்லாம் காரணம். இதைப் பற்றி ஆய்வு செய்தால் நாம் ’ நேஷன் ஆஃப் இஸ்லாம் ’ என்ற அமைப்பு தோன்றியதன் வரலாற்றுப் பின்னணிக்குப் போய்ச் சேருவோம்
.
மைக்கேலின் குடும்பத்தில் அவரது மூத்த சகோதரரான ஜெர்மெய்ன் ஜாக்ஸனும் 1989-இல் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறினார். பெயருக்காக மாறாமல் தொழுகை, நோன்பு போன்ற மார்க்க வழிமுறைகளையும் பின்பற்றினார். அப்போது அவர் “மைக்கேலும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறினால் அது அவனது வேதனையைப் போக்கும்; அது அவனுடைய பிரச்சினைகளைத் தீர்த்து அவனுக்கு அமைதியைக் கொடுக்கும் ” என்று தெரிவித்தார்.
ஒருக்கால், மைக்கேல் தன் அண்ணன் சொன்னதைப் போல் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாமைப் பின்பற்றியிருந்தால் இப்படி ஒரு செயற்கையான அகால மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால், மைக்கேல் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டு பத்திரிகைகளும், அமெரிக்க வெள்ளைச் சமூகமும் மைக்கேலுக்கு மிக எதிர்ப்பாக இருந்த நிலையில் அவருடன் கூடவே இருந்து அவருக்குத் தேவையான தார்மீக ஆதரவை அளித்தவர் இந்த ஜெர்மெய்ன்.
ஜெர்மெய்ன் கூறியது போல் வலியைப் போக்குவதற்கு ஆன்மீகம் இருக்க, அதை விட்டு விட்டுத் தான் வாழ்நாள் பூராவும் எதிர்த்த அமெரிக்க வெகுஜன நுகர்வுக் கலாச்சாரம் அளித்த செயற்கையான வலி நிவாரணி மாத்திரைகளை நாடியதுதான் மைக்கேலின் அகால மரணத்துக்குக் காரணமாகி விட்டது. இந்தப் போக்கு மைக்கேலிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்ததற்கு அறிகுறிதான் அவர் தன்னுடைய உடலை வெள்ளைக்காரர்களைப் போல் மாற்றிக் கொண்ட நடவடிக்கைகளும் என்று சொல்லலாம். முதலில் கறுப்பின மக்களின் பிரத்யேகமான கம்பிச் சுரள் தலைமுடியை அவர் நீளமாக மாற்றிக் கொண்டார். தட்டை மூக்கை நீளமாக மாற்றிப் பின்னர் அதிலேயே பல ப்ளாஸ்டிக் ஸர்ஜரிகளைச் செய்து கொண்டார். சருமத்தையும் வெள்ளை நிறமாக மாற்றி அமைத்துக் கொண்டார். எல்லாம் சேர்ந்து அவரை ஒரு வேற்றுக் கிரகத்து மனிதனைப் போல் மாற்றியது.
மைக்கேலின் பாடல்கள் அனைத்தும் போருக்கு எதிரானவை; அதிகாரத்துக்கு எதிரானவை; உலக சமாதானத்தைப் பேசுபவை. ஆனால் அமெரிக்காவோ தொடர்ந்து உலக அளவில் போர்ச் சூழலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லி ராணுவத்தை அனுப்பி ஈராக்கையே ஒட்டு மொத்தமாக அழித்து விட்டு, பிறகு, ஈராக்கில் ரசாயன ஆயுதம் இல்லை என்றது அமெரிக்கா. ஆஃப்கனில் ரஷ்ய ஆதிக்கத்தை நிறுத்துவதற்காக தாலிபான்களை வளர்த்து விட்டுப் பின்னர் தாலிபான்களை அழிப்பதற்காக ராணுவத்தை அனுப்பி ஆஃப்கனையே காலி செய்து விட்டது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்தப் போர் ஆதரவுக் கொள்கையை எதிர்த்துத்தான் அறுபதுகளில் பீட் எழுத்தாளர்கள் என்று சொல்லப்பட்ட மூன்று எழுத்தாளர்களும் மூன்று வெவ்வேறு விதமான ஆன்மீக வழிகளில் சென்றார்கள். வில்லியம் பர்ரோஸ் அரபி மொழி கற்றுக் கொண்டு மொராக்கோவுக்குச் சென்றார். ஜேக் கெரோவாக் பௌத்தத்தை நாடி திபெத் சென்றார். ஆலன் கின்ஸ்பெர்க் காவி வேஷ்டியை உடுத்திக் கொண்டு காசிக்கு வந்து சேர்ந்தார். இந்த பீட் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்தான் ஜான் லெனனும்
.
***
1979-இல் ஒரு கடினமான நடனப் பயிற்சியின் போது மைக்கேலின் மூக்கு உடைந்தது. அதனாலேயே ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அதனால் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்படவே மீண்டும் ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டி வந்தது. ஆனால் இந்தப் பிரச்சினை இதோடு நிற்கவில்லை. 1984. மைக்கேலின் வயது அப்போது 25. 3000
பார்வையாளர்களுக்கு
முன்னே பில்லி ஜீன் பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருக்கிறார். அப்போது மேடையில் fireworks-
இன் இடையே மைக்கேலின் முடியில் தீப்பற்றி விடுகிறது. அது அவருடைய தலையிலும் பற்றி விட அங்கேயும் ப்ளாஸ்டிக் சரிஜரி செய்யப்பட்டது. இப்படியாகத்தான் ப்ளாஸ்டிக் சர்ஜரி, வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றோடு மைக்கேலுக்குத் தொடர்பு ஏற்பட்டது.
மைக்கேல் ஜாக்ஸனின் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் எழுதிக் கொண்டே போக வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு பாடலிலும் அவ்வளவு செய்தி இருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு நாளும் அவருடைய ‘Heal the World’ என்ற பாடலோடுதான் தொடங்குகிறது. அதை ஒரு பிரார்த்தனைப் பாடலாகவே நான் கருதுகிறேன். அந்தப் பாடலின் சில வரிகள் கீழே
:
Heal The World
Make It A
Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are
People Dying
If You Care Enough
For The Living
Make A Better
Place
For You And For Me
***
And The Dream We
Were
Conceived In
Will Reveal A Joyful Face
And The World We
Once
Believed In
Will Shine Again In Grace
Then Why Do We Keep
Strangling
Life
Wound This Earth
Crucify Its Soul
Though It's Plain To See
This
World Is Heavenly
Be God's Glow இதேபோல் மைக்கேலின் We are the World என்ற பாடலும் இந்த உலகின் தேசிய கீதம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அன்பின் வலிமையை உணர்த்தக் கூடிய பாடல்
.
***
1.
உஷர் பாடிய
‘Gone too soon’ .
2 . Shaheen
Jafargholi என்ற 12 வயதுச் சிறுவன் பாடிய அஞ்சலிப் பாடல்
.
இக்கட்டுரையோடு சேர்த்துக் கேட்க வேண்டிய பாடல்கள் இவை. மைக்கேல் ஜாக்ஸனின் இறுதி அஞ்சலியின் போது பாடப் பட்டவை
:
3. மைக்கேல் ஜாக்ஸனின் சுயசரிதை ‘மூன்வாக் ’. இந்தப் புத்தகம் ஜாக்குலின் கென்னடியால் ‘எடிட் ’ செய்யப்பட்டது.




Thursday 16 August 2018

வாஜ்பாய் வரலாறு (Vaajpayee Biography)


அடல் பிகாரி வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு


இந்திய அரசியலில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் முக்கியமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்பவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.

AB Vajpayee Death: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார்Aug 16, 2018.

வரலாற்றில் இடம்பிடிக்கும் வாஜ்பாயின் சாதனைகள்..

வாஜ்பாய் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு டிசம்பர் 25, 1924 அன்று குவாலியரில் பிறந்தார். அவரது தாத்தா, பண்டிட் ஷியாம் லால் வாஜ்பாய், உத்தரப் பிரதேசத்தின் பாதேஷ்வர் என்ற அவரது பூர்வீக கிராமத்திலிருந்து குவாலியருக்கு குடியேறினார். 
தந்தை, கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயி, தனது சொந்த ஊரில் ஒரு கவிஞரும் பள்ளிக்கூட ஆசிரியரும் ஆவார். வாஜ்பாய் குவாலியரில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார். குவாலியரில் தற்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரியில் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார்.
1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக 23 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார். ஆர்ய சமாஜத்தின் இளைஞர் பிரிவான ஆர்ய குமார் சபாவில் 1944ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1939ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இணைந்தார். பாபா சாஹேப் ஆப்டி மீதான ஈடுபாடு காரணமாக 1940-44ல் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்களுக்குச் சென்றார். 1947ஆம் ஆண்டில் முழுநேர ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் ஆனார். அப்போது இந்திய பிரிவினையை ஒட்டி நடந்த கலவரத்தினால் அவரது சட்டப்படிப்பு பாதியில் தடைபட்டது.
1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடைசெய்யப்பட்டது. தீன்தயாள் உபாத்யாயா மூலம் 1951ஆம் ஆண்டு சியாம பிரசாத் முகர்ஜி தொடங்கிய பாரதீய ஜன சங்கம் என்ற இந்து தேசியவாத வலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார். அதன் வடக்கு மண்டல தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். சியாம பிரசாத் முகர்ஜியைப் பின்தொடர்பவராக தன்னை மாற்றிக்கொண்ட வாஜ்பாய், அவருடன் இணைந்து 1953ஆம் ஆண்டு காஷ்மீரைச் சேராதவர்கள் காஷ்மீரில் ஒடுக்கப்படுவதை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அந்தப் போரட்டத்தின்போது முகர்ஜி உயிரிழந்த பின், ஜன சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பு தீன்தயாள் உபாத்யாயாவிடம் வந்தது.

1957ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூர் தொகுதியில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார். தீன்தயாள் உபாத்யாயாவின் மறைவுக்குப் பின் 1968ஆம் ஆண்டில் ஜன சங்கத்தின் தலைவர் பொறுப்பு வாஜ்பாய் வசம் அளிக்கப்பட்டது. அவருடன் எல்.கே. அத்வானி, நாநாஜி தேஷ்முக், பல்ராஜ் மதோக் ஆகியோரும் ஜன சங்கத்தின் முக்கியத் தலைவர்களாக விளங்கினார்கள்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சி வென்று ஆட்சி அமைத்தபோது, மொரார்ஜி தேசாய் பிரதமரானார். வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சரானார். 1979ஆம் ஆண்டு ஜூலை 28 வரை மட்டுமே இந்த ஆட்சி நிலைத்தது. 
1980ஆம் ஆண்டு தனது சகாக்களான எல்.கே. அத்வானி, பேரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் கைகோர்த்து ஜன சங்கம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை ஒருங்கிணைத்து பாரதீய ஜனதா கட்சியைத் தோற்றுவித்தார் வாஜ்பாய். அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார். இதன் மூலம் காங்கிரஸ் அரசின் வலிமையான விமர்சகராகவும் வாஜ்பாய் உருவெடுத்தார். 

1996ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக வாஜ்பாய் அறிவிக்கப்பட்டார். ஆனால், அப்போதைய பாஜக தலைவர் எல்.கே. அத்வானி. தேர்தல் முடிவுகள் வெளியானதும் மே 16, 1996ல் 10வது இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி ஏற்றார். அவரது பதவி வெறும் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. 
1998ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பதவியில் நிலைத்தார். 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரே வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டதால் ஆட்சி கவிழ்ந்தது. இந்த 13 மாத ஆட்சியில் 1998ஆம் ஆண்டு மே 11,13 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள போக்ரான் பாலைவனப்பகுதியில் 5 அணுகுண்டு வெடிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. இதே இடத்தில்தான் இந்தியா ‘சிரிக்கும் புத்தர்’ என்ற பெயரில் தனது முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனையை 24 ஆண்டுகளுக்கு முன் 1974ல் நடத்தியிருந்தது. 


இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் வாஜ்பாய் இந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். லாகூர் – டெல்லி இடையே முதல் பேருந்து சேவை தொடங்கி வைத்தார். மேலும் 1999ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. லாகூர் ஒப்பந்தம் எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மேலும் பிரச்னைகளைத் தீர்க்கவும் வர்த்தக உறவை மேம்படுத்தவும் இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தவும் உறுதியளிக்கும் விதமாக அமைந்தது. 1998ஆம் ஆண்டு போக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனைகளால் அதிருப்தியுற்ற பாகிஸ்தானும் பிற தெற்காசிய நாடுகளும் இதனை வரவேற்றன.
1999ஆம் ஆண்டில்தான் தமிழகத்தின் அதிமுக கட்சி வாஜ்பாய் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை விலகிக்கொள்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால், வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது. அக்டோபர் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் பல கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டமைத்த வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பில் அமர்ந்தார். இந்த முறை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவுசெய்த அவர், இந்தியப் பிரதமராக முழு பதவிக்காலத்தை பூர்த்திசெய்த முதல் காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமர் என்ற பெருமைக்கு உரித்தானார். 
1999 ஜூன் மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்த ஆபரேஷன் விஜய் என்ற தாக்குதலை இந்திய ராணுவம் திட்டமிட்டது. இத்திட்டத்தின் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தைத் தாக்கி பெரும் சேதத்தை உண்டாக்கியது. இதனால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின; கார்கில் போர் இந்தியாவின் வெற்றியுடன் முடிந்தது. 
மூன்றாவது முறை பிரதமரானபோது, 1999 டிசம்பரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது, 2001 டிசம்பரில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது, 2002 குஜராத் கலவரத்தில் சுமார் ஆயிரம் இந்து – முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டது போன்றவை வாஜ்பாய் அரசிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தின. தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகிய குறிப்பிடத்தக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சர்வதேச உறவுகளை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்கள் மற்றும் அந்நிய மூதலீடு ஊக்குவிப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 
வாஜ்பாயி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், நமிதா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். அவருக்கு இயற்கையின் மீது தனி விருப்பம் உண்டு. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி அவருக்குப் பிடித்தமான இடங்களில் முதன்மையானது. இசையிலும் நடனத்திலும் ஆர்வம் அதிகம் கொண்டவர். பள்ளிப்பருவத்திலிருந்து இலக்கிய ஈடுபாடு கொண்டதால் எழுத்திலும் முத்திரை பதித்தார். பாஞ்சஜன்யா, ராஷ்டிரதர்மா ஆகிய இந்தி மாத இதழ்களிலும் அர்ஜுன், ஸ்வதேஷ் ஆகிய நாளேடுகளிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். பல கவிதை நூல்களையும் சுயசரிதையையும் எழுதினார். வாஜ்பாய் கவிதைகள் என்ற தலைப்பில் தமிழிலும் அவரது கவிதைகள் வெளியாகியுள்ளன.
2001ஆம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களுக்காக 10 அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டிருக்கிறார். ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டிருக்கிறது. பக்கவாதத்தினால் சரியாக பேசமுடியாத நிலை ஏற்பட்டது. சர்க்கரை நோயால் பல ஆண்டுகள் கடினமானதாகக் கழிந்திருக்கின்றன. 2005ஆம் ஆண்டுக்குப் பின் பொது வாழ்க்கையிலிருந்து விலகினாலும் தன் உடலுடன் போராடிக்கொண்டிருந்தார். 
நாடாளுமன்ற உறுப்பினராக 50 ஆண்டுகள் செயல்பட்ட வாஜ்பாய் கட்சி பேதமில்லாமல் அனைவரது மனதிலும் நீங்காத இடம்பிடித்தார். 1962ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977-79ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். வாஜ்பாய் இளைய வயதில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளைக் கேட்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பெரிதும் பாராட்டிப் பேசினார். “வாஜ்பாய் என்ற இந்த இளைஞர் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார்” என நேரு தன் கணிப்பை வெளியிட்டார். நேருவின் கணிப்பை வாஜ்பாய் தன் செயல்திறத்தால் செய்துகாட்டினார்.