Thursday 31 January 2019

டெல்லியின் 600 வருட பழைய திகில் மாளிகை பற்றி உங்களுக்கு தெரியுமா?




மல்ச்சா மஹால் என அழைக்கப்படும் இந்த திகில் மாளிகை டெல்லியில் அமைந்திருக்கிறது. இதை விளயாட் மஹால் என்றும் அழைக்கின்றனர். துக்ளக் சாம்ராஜியத்தின் போது தங்குமிடமாக இருந்துள்ளது இந்த மாளிகை..

பேய் கதைகளில் வருவது போலவே அடர்ந்து காட்டுக்கு நடுவே அமைந்திருக்கிறது இந்த மல்ச்சா மஹால். இந்த மாளிகை பற்றி அறிந்துக் கொள்ள சென்றவர்கள் பலர் அலறியடித்து தான் வெளிவந்துள்ளனர். சிலர் மாயமாகி போனதாகவும் கூறப்படுகிறது
பேகம்!
பேகம் என்ற பெண்ணின் இரக்கமற்ற கொடூரமான மரணத்திற்கு பிறகு தான் இது பேய் மாளிகையாக ஆனது என கூறப்படுகிறது.
மர்மம்!
பேகம் ஒரு விசித்திரமான பெண் என்றும் இவரது அணுகுமுறை வினோதமாக இருக்கும் எனவும், மர்மம் விலகாத காரணத்தால் இவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

திருடப்பட்ட கல்லறை...
மர்மமான முறையில் தற்கொலை செய்துக் கொண்ட பேகத்தின் கல்லறையில் இருந்து உடல் ஒருமுறை திருடப்பட்டுள்ளது. இதன் விளைவாக பேகத்தின் பிள்ளைகள் இவரது உடலை தகனம் செய்து அந்த சாம்பலை ஒரு கண்ணாடி குவளையில் அடைத்து வைத்தனர்.
தனிமையில் வாழ்ந்த பேகத்தின் பிள்ளைகள்...
பேகத்தின் பிள்ளைகளே குறைந்த செலவில், தனிமையில் தான் வாழ்கின்றனர் என கூறப்படுகிறது. இது போன்ற பல காரணத்தால் மால்ச்சல் மஹால் மெல்ல, மெல்ல பேய் மாளிகையாக உருமாற துவங்கியது. ஒரு காலத்தில் இந்த மால்ச்சல் மாளிகை பல மன்னர்களின் உடமையாக இருந்தது.
துக்ளக் ராஜ்ஜியம்!
துக்ளக் ராஜ்ஜியம் தான் முதன் முதலில் இங்கு வாழ்ந்தனர். மால்ச்சல் கிராமத்தில் இது ஒரு சமூக இடமாக இருந்தது. 600 வருட வரலாறு கொண்டுள்ளது மால்ச்சல் மஹால்.
பேகத்தின் மரணத்திற்கு பிறகு....
பேகத்தின் மரணத்திற்கு பிறகு சமூக விரோதிகள் அந்த மாளிகையில் செவங்கள் இருக்கின்றன என எண்ணி, தாக்குதல் சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்தனர்.
துப்பாக்கியும், நாய்களும்!
தொடர்ந்து தாக்குதல், சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வந்ததால் அரசு இவர்களுக்கு துப்பாக்கி மற்றும் நாய்களை பாதுகாப்பிற்கு அளித்தது. பாதுகாப்பிற்கு உள்ள நாய்களுக்கு இறைச்சி வாங்க இளவரசர் சைக்களில் சென்று வருகிறார் என்றும் சில செய்திகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது.

Wednesday 30 January 2019

திகில் நிறைந்த தீவுகள்!!!!!



ஒரு நொடி கண்ணை மூடுங்கள். ஒரு தீவு... அங்கு யாருமே இல்லை... நீங்கள் மட்டும் தனியாக இருக்கிறீர்கள். கொஞ்ச தூரம் நடக்கிறீர்கள். சில பாழடைந்த வீடுகள்... மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. ஓர் அமானுஷ்யம்... இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்?. கதையல்ல... நிஜம். அப்படி உலகின் திகில் கிளப்பும் தீவுகள் குறித்த வரலாறு இது... 

கிளிப்பர்டன் தீவு (Clipperton Island) : 

1914-ம் ஆண்டு... மெக்சிகோவின் தென் - மேற்குப் பகுதியில் இருக்கும் இந்தத் தீவை  பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பாதுகாக்க 100 பேரை குடியமர்த்துகிறார், அன்றைய மெக்சிகோ அதிபர். ஒரு கலங்கரை விளக்கத்தையும் அமைக்கிறார். இவர்களுக்கான உணவுகள் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கப்பலில் அனுப்பப்பட்டு வந்தது.

திடீரென மெக்சிகோவில் உள்நாட்டு கலவரம் வெடிக்க, இந்தத் தீவையும், இந்த 100 பேரையும் மறந்து போயினர். உண்ண உணவில்லாமல் போராடி, ஒவ்வொருத்தராக செத்து மடிய ஆரம்பித்தனர்.  கடைசியாக லைட் ஹவுஸ் வாட்ச்மேன், அல்வாரிஸும் , 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர். பித்துப் பிடித்து போன அல்வாரிஸ், அந்தப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொல்ல ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில், தன் குழந்தைகளைக் காக்க டார்ஸா ரென்டன் என்கிற பெண்மணி அவனை கொலை செய்கிறார். இரண்டாண்டுகள் உயிர் பிழைத்திருந்த 4 பெண்கள் மற்றும் 7 குழந்தைகளை 1917-ல், அந்த வழி வந்த அமெரிக்காவின் ஒரு கப்பல் காப்பாற்றியது. அன்று முதல், இன்று வரை மனித கால் தடம் பதியாமல், மர்ம பூமியாகத் திகழ்கிறது கிளிப்பர்டன் தீவு...



திகில் தீவுகள்


கன்கஞ்சிமா தீவு (Gunkanjima Island) :

ஜப்பானின் நாகசாகி அருகே இருக்கும் ஒரு தீவு. இந்தப் பகுதியில் 1800 களில்  நிலக்கரிச் சுரங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பிரபல மிட்சுபிஷி நிறுவனத்தின் இந்த சுரங்கத்தில் வேலை செய்ய மக்கள் தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 16 ஏக்கர் பரப்பரவிளான தீவு முழுக்க, காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிக் கூடங்கள் என அனைத்தும் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரை பணியாளர்கள் அனவரும் கொத்தடிமை முறையிலேயே பணிபுரிந்து வந்தனர். 1960களின் முடிவில் சுரங்கம் மூடப்பட்டது. மக்கள் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்தவாறு வெளியேறினர். ஒரு வரலாற்றுத் துயரத்தின் சாட்சியாக நீலக் கடலின் நடுவே கான்கிரீட் தீவாக நின்று கொண்டிருக்கிறது கன்கஞ்சிமா.


திகில் தீவுகள்


ராஸ் தீவு (Ross Island) :

அண்டார்டிக் பிரதேசத்தில் இருக்கும் ஒரு தீவு. 1841-ல் ஜேம்ஸ் ராஸ் என்ற பிரிட்டிஷ் ஊர்சுற்றி இந்த தீவைக் கண்டுபிடித்தார். அவரின் பெயரே இதற்கு சூட்டப்பட்டது. எரிபஸ், டெரர் என இரு எரிமலைகள் இங்கு உள்ளது. ராஸ் அமைத்த கூடாரங்கள் இன்னும் இந்த பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்டார்டிக் பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ள அடித்தளமிட்டது இந்த தீவு தான். 1979-ல் ஒரு மிகப்பெரிய விமான விபத்து ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் இங்கு இறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத் தீவின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று வரை யாருமே சென்றதில்லை.


திகில் தீவுகள்


அல்டாப்ரா தீவு (Aldabra Island) :

செஷல்ஸ் நாட்டின் தீவு. லட்சக்கணக்கான ஆமைகள் வசிக்கும் தீவு. 1888-ல் செஷல்ஸ் அரசாங்கம் இந்தத் தீவில் ஒரு கிராமத்தை உருவாக்கி மக்களை வாழச் செய்தனர். ஆனால், குடிநீர் ஆதாராமற்ற இந்தத் தீவில் மக்களால் தொடர்ந்து வசிக்க முடியவில்லை. இந்த வழி கப்பல்களில் போவோர் ஆமைகளை வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் ஆமைகளே அழியும் நிலை ஏற்பட்டது. ஆனால், 1950களுக்குப் பிறகு இந்த வழியில் போகும் கப்பல்கள் தீவை எட்ட பயப்படத் தொடங்கினர். காரணம் இன்றுவரைத் தெரியவில்லை. பல ஆண்டுகள் யாரும் அதன் அருகே போகவில்லை. இன்று ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 


திகில் தீவுகள்


ஸ்ட்ரோமா தீவு (Stroma Island) :



திகில் தீவுகள்


ஸ்காட்லாண்டில் இருக்கும் சிறு தீவு. 1901யில் 375 பேர் வாழ்ந்த தீவில், 1961யில் 12 பேர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். இன்று யாருமில்லை. ஒரேயொருவர் மட்டும் தன்னுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டபடி, அவ்வப்போது வந்து போகிறார். ஒரு காலத்தில் இந்த தீவு மக்களின் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருந்திருக்கிறது. தன்னிறைவு பெற்ற தற்சார்பு சமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர். திடீரென மக்கள் தீவை விட்டு விலகியதற்கான உறுதியான காரணம் இன்று வரை தெரியவில்லை. வெளியேறிய மக்களும் காரணங்களைப் பேச மறுக்கிறார்கள். மக்கள் வெளியேறியத் தொடங்கியது முதல் இந்தப் பகுதியில் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகின. இன்றும் அலைகள் மிகச் சாதாரணமாக 12 அடி உயரம் வரை எழுகிறது. ஒரு அமானுஷ்யமான அமைதியோடு தனியே நின்று கொண்டிருக்கிறது ஸ்ட்ரோமா தீவு.

Tuesday 29 January 2019

உலகின் டாப் 10 நீளமான ஆறுகள்


உலகின் டாப் 10 நீளமான ஆறுகள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். ஆறுகள் நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரீகம் ஆகியவற்றிற்கு ஆதாரமாக அமைந்தவை.
மனிதனின் வளர்ச்சியானது ஆறுகளாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆக ஆறுகளே நம் வாழ்வின் ஆதாரம்.
ஆறுகளின் நீளத்தினை அளவீடு செய்யும்போது அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை கணக்கிடப்படுகிறது.
ஆறுகள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலினை அடையும்வரை கடந்து செல்லும் இடங்களான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், சமவெளிகள் ஆகியவையும் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இனி உலகின் நீளமான ஆறுகள் பற்றிப் பார்ப்போம்.

1.நைல் நதி, வடகிழக்கு ஆப்பிரிக்கா

நைல் ஆறு
நைல் ஆறு

உலகின் முதல் நீளமான ஆறு நைல் ஆகும். இதனுடைய மொத்த நீளம் 6,650கிமீ ஆகும். இது ஆப்பிரிக்கா கண்டத்தில் வடகிழக்குப் பகுதியில் வடக்கு நோக்கிப் பாய்கிறது.
இது ஆப்பிரிக்காவில் தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரிட்ரியா, சூடான் மற்றும் எகிப்து என மொத்தம் பத்து நாடுகளை வளப்படுத்துகிறது.
எகிப்து மற்றும் சூடான் நாடுகள் இந்நதியினால் அதிகப்பயனை அடைகின்றன. வெள்ளை நைல், நீல நைல், அத்பரா ஆகியவை நைலின் முக்கிய துணை நதிகளாகும்.
வெள்ளை நைல் மத்திய ஆப்பிரிக்காவின் ஏரிகளிலும், நீல நைல் தனா ஏரியிலும் உற்பத்தியாகி சூடானில் இணைந்து இறுதியில் மத்தியதரைக் கடலில் கலக்கிறது.  இவ்வாற்றின் கரையில் உருவான பழைமையான நாகரீகம் எகிப்திய நாகரீகம் ஆகும்.

2.அமேசான் ஆறு, தென்அமெரிக்கா

அமேசன் ஆறு
அமேசன் ஆறு

உலகின் இரண்டாவது நீளமான நதி அமேசான் ஆகும். இதனுடைய மொத்த நீளம் 6400கிமீ ஆகும். இது தென்அமெரிக்காவின் பெருநாட்டில் ஆன்டீஸ் மலைத்தொடரில் பனி மூடிய நவாடோ மிசிமி சிகரத்தின் பனி ஏரியில் உற்பத்தியாகி அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.

அமேசன் ஆறு உற்பத்தியாகும் இடம்
அமேசன் ஆறு உற்பத்தியாகும் இடம்

அமேசான் ஆறு பெரு, ஈகுவடார், பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் பாய்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஆறு என்ற பெருமையினை உடையது.
அமேசான் ஆற்றினால் வெளியேற்றப்படும் நீரின் அளவானது இதற்கு அடுத்து பெரிய எட்டு ஆறுகள் வெளியேற்றும் நீரின் அளவினைவிட அதிகமாகும்.
உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் அமேசான் ஆற்றில் அமைந்துள்ளது. அமேசான் ஆறு மற்றும் அதில் உள்ள மழைக்காடுகள் உலகில் உள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கினை தன்னுள் கொண்டுள்ளது.
இவ்வாற்றில் உலகில் மிகப்பெரிய டால்பின், அனகோண்டா பாம்புகள், அமேசான் முதலைகள், பிரான்கா மீன்கள் ஆகியவை காணப்படுகின்றன.

3.யாங்சி ஆறு, சீனா

யாங்சி ஆறு
யாங்சி ஆறு

உலகின் மூன்றாவது நீளமான நதி யாங்சி ஆறு ஆகும். இதனுடைய நீளம் 6300கிமீ ஆகும். இது ஆசியாவின் மிகநீளமான நதி என்ற பெருமையைப் பெற்றது.
ஒரே நாட்டிற்குள் பாயும் ஆறுகளில் இது முதலிடத்தைப் பெறுகிறது. அதிக நீரினை வெளியேற்றும் ஆறுகளின் வரிசையில் யாங்சி ஆறு ஆறாவது இடத்தினைப் பெறுகிறது.
சீனாவின் ஐந்தில் ஒருபகுதி யாங்சி ஆற்றால் வளப்படுத்தப்படுகிறது. இவ்வாற்றின் கரையில் சீனமக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றனர்.
இது சீனாவின் கிங்ஹாய்-திபெத் பீடபூமியில் உள்ள பனிப்பாறைகளில் உருவாகி தென்மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு சீனப்பகுதிகளின் வழியாக கிழக்கு நோக்கிப் பாய்ந்து ஷாங்காய் நகரின் வழியே கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது.
சீனாவின் வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றில் யாங்சி ஆறு முக்கியப்பங்கு வகிக்கிறது. சீனாவின் 20 சதவீத உள்நாட்டு உற்பத்தியானது இவ்வாற்றால் வளப்படுத்தப்படும் பள்ளத்தாக்கிலிருந்து கிடைக்கிறது.
சீன முதலைகளின் வசிப்பிடமாக உள்ள யாங்சி ஆறானது சீனாவை வடக்கு தெற்காகப் பிரிக்கிறது.

4.மிசிசிப்பி ஆறு, வடஅமெரிக்கா

மிசிசிப்பி ஆறு
மிசிசிப்பி ஆறு

இது உலகின் நான்காவது மிகநீளமான ஆறாகும். இதனுடைய நீளம் 6275கிமீ ஆகும். இது வடஅமெரிக்காவின் மிகநீளமான நதியாகும். மிசிசிப்பி ஆற்றின் நீரானது 98 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவையும், 2 சதவீதம் கனடாவையும் வளப்படுத்துகிறது.
இந்நதியானது மினசோட்டாவிலுள்ள இத்தாஸ்கா ஏரியில் இருந்து உற்பத்தியாகி ஐக்கியஅமெரிக்காவின் 30மாநிலங்கள், கனடாவின் இருமாநிலங்கள், மெக்ஸிகோ வளைகுடாவின் வழியாக அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
12,000 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் தங்களின் உணவு மற்றும் போக்குவரத்திற்காக இவ்வாற்றினை சார்ந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் மிசிசிப்பி ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது.  பல தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவை இவ்வாற்றில் அமைந்துள்ளன.

5.யெனீசீ ஆறு, ஆசியா

யெனீசீ ஆறு
யெனீசீ ஆறு

இது உலகின் நீளமான ஆறுகளில் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறது. இதனுடைய நீளம் 5539கிமீ ஆகும். ஆர்டிக் பெருங்கடலில் கலக்கும் மிகப்பெரிய நதி அமைப்பு என்ற பெருமை யெனீசீ-அங்காரா-செலங்காஇடியர் ஆகியவற்றைச் சாரும்.
இந்நதியானது முங்காரிகைன் கோலில் உற்பத்தியாகி மங்கோலியா, ரஷ்யா வழியாக காரா கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் 2.9 சதவீதம் மட்டுமே மங்கோலியாவில் உள்ளது.
இவ்வாறானது 55 வகையான மீன்களுக்கு வாழிடமாக உள்ளது. குளிர்காலத்தில் இவ்வாற்றின் கரையோரங்களில் ரெயின்டீர் மான்கள் பெரிய கூட்டமாகக் காணப்படுகின்றன. எனவே இந்நதியின் சுற்றுசூழலானது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

6.மஞ்சள் ஆறு, சீனா

மஞ்சள் ஆறு
மஞ்சள் ஆறு

மஞ்சள் ஆறு உலகின் நீளமான ஆறாவது ஆறாகும். இதனடைய நீளம் 5464கிமீ ஆகும். இது சீனா மற்றும் ஆசியாவில் இரண்டாவது நீளமான ஆறு ஆகும்.
இது மேற்கு சீனாவின் சிங்ஹாங் மகாணத்திலுள்ள பாயன்ஹர் மலைத்தொடரில் தோன்றி 9மகாணங்கள் வழியாக சென்று பொகாய் கடலில் கலக்கிறது.
இவ்வாறானது காற்றடுக்கு வண்டல் மண்ணினை தன்னுள் கொண்டுவருவதால் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கிறது. எனவே மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாற்றில் காணப்படும் வண்டல் மண் ஆற்றில் நீர்வரத்து குறையும்போது ஆற்றின் பாதையில் படிந்து உயர்ந்து அணைபோன்று உருவாகிறது.
மீண்டும் இவ்வாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஆறானது வழக்கமான பாதையில் தனது செல்லாமல் பள்ளமான பகுதியில் (வேறு இடத்தில்) பயணத்தை மாற்றி வெள்ளப்பெருக்கினை உண்டாக்கி பெருத்த சேதத்தினையும் உண்டாக்குகிறது. எனவே இது சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
மஞ்சள் ஆறு சீனமொழியில் ஹோவாங் ஹோ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாற்றுப்பகுதி செழிப்பானதாக இருந்ததால் சீனநாகரீகம் முதலில் இங்குதான் தோன்றியது. எனவே மஞ்சள் ஆறு சீனநாகரீகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது.

7.ஓப் ஆறு, ஆசியா

ஓப் ஆறு
ஓப் ஆறு

இது உலகின் ஏழாவது மிகநீளமான நதியாகும். இதனுடைய நீளம் 5410கிமீ ஆகும். இவ்வாறு ரஷ்யா, கசகஸ்தான், சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளை வளப்படுத்துகிறது.
இது மேற்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் கடலில் கலக்கும் மூன்று முக்கிய நதிகளில் இதுவும் ஒன்று. (ஏனையவை யெனீசீ, மற்றும் லீனா ஆறு ஆகும்.)
இந்த ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உலகின் மிகப்பெரிய வளைகுடாவான ஓப் வளைகுடாவை உண்டாக்குகிறது. வேளாண்மை, மின்சக்தி, குடிநீர், மீன்பிடித்தல் ஆகியவற்றிற்கு இந்த ஆறு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

8.பரனா ஆறு, தென்அமெரிக்கா

பரனா ஆறு

இது உலகின் நீளமான நதிகளில் எட்டாவது இடத்தைப் பெறுகிறது. இதனுடைய நீளம் 4880கிமீ ஆகும். இது தென்அமெரிக்காவின் தெற்கு மத்தியில் பாய்ந்து பிரேசில், அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, உருவே நாடுகளை வளப்படுத்துகிறது.
இது தென்அமெரிக்காவின் இரண்டாவது நீளமான நதியாகும். ஆழம் மிகுந்த இந்நதியானது கடல்வழியாக உள்நாட்டு நகரங்களை இணைக்க உதவுகிறது.
தெற்கு பிரேசிலில் பரனைபா ஆறும், கிராண்ட் ஆறும் சந்திக்கும் இடத்தில் இவ்வாறு உற்பத்தியாகி அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
இவ்வாற்றில் நீர்மின்சாரம் தயாரிக்க பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாற்றின் டெல்டா பகுதியானது பறவைகளை கண்டுகளிக்க சிறந்த இடமாகும். பரனா என்பதற்கு பெரிய கடல் என்பது பொருளாகும்.

9.காங்கோ ஆறு, ஆப்பிரிக்கா

காங்கோ ஆறு
காங்கோ ஆறு

இது உலகின் ஒன்பதாவது நீளமான ஆறாகும். இதனுடைய நீளம் 4700கிமீ ஆகும். இது ஆப்பிரிக்காவின் மேற்கு நடுப்பகுதியில் பாய்ந்து இறுதியில் அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
ஆப்பிரிக்காவில் நைலுக்கு அடுத்த மிகப்பெரிய ஆறு காங்கோ ஆகும். உலகில் அமேசானுக்கு அடுத்தபடியாக அதிக கனஅளவு நீரினைக் கொண்டு செல்லும் ஆறு மற்றும் உலகின் ஆழமான ஆறு (220 மீ) என்ற பெருமைகளையும் இது உடையது.
இந்நதியானது காப்பி, சர்க்கரை, பருத்தி உள்ளிட்ட பொருள்களின் வர்த்தகத்திற்கும், நீர்மின்சாரம் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

`10.அமுர் ஆறு, ஆசியா

அமுர் ஆறு
அமுர் ஆறு

இது உலகின் பத்தாவது நீளமான ஆறு ஆகும். இதனடைய நீளம் 4444கிமீ ஆகும். இவ்வாறு வடகிழக்கு சீனாவின் மேற்குப் பிராந்திய மலைகளில் சுமார் 303 உயரத்தில் சில்கா மற்றும் அர்குன் ஆகிய இருபெரும் ஆறுகளின் இணைப்பினால் உருவாகி ஒக்வொட்ச் கடலில் கலக்கிறது.
இந்த ஆறு சீனாவிற்கும், இரஷ்யாவிற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் கிழக்கு நோக்கி ஓடுகிறது. சீனாவில் இவ்வாறு கருப்பு டிராகன் ஆறு என்று அழைக்கப்படுகிறது.
அமுர் ஆற்றில் கலுகா, ஆசிய மீன், ஆர்டிக் சைபீரிய மீன், டெய்மன் மீன், அமுர் கேட்மீன், மஞ்சள்சீக் மீன் போன்ற மீன்வகைகளும், அமுர் சிறுத்தைகளும் காணப்படுகின்றன

Monday 28 January 2019

900 பேரை கொன்று குவித்த கொடியவன் ஜிம் ஜோன்ஸ்(Jim Jones)



தீவிரவாதிகள் எப்படி உருவாகிறார்கள்??


மனித வெடிகுண்டு எப்படி தன்னையும் மாய்த்து, ஏதும் அறியாத அப்பாவி மனிதக் கூட்டத்தையும் கொல்லச் செய்கிறது?

இவர்களுக்கெல்லாம் அறிவே இல்லையா...? என்று கேட்டால் இருக்கிறது...! நிறைய அறிவு இருக்கிறது. ஆனால் எப்படிப்பட்ட அறிவாளியையும் அடிமுட்டாளாக்கி விடும் சக்தி மூளைச் சலவைக்கு உண்டு.

சிறந்த முறையில் மூளைச் சலவை செய்தால், எதிராளி உங்களை மரண உலகத்துக்கே அழைத்துப் போகலாம். உங்களை மட்டுமல்ல, உங்களின் அழகான மனைவி அன்பான குழைந்தைகள் எல்லாமே கூண்டோடு தற்கொலை செய்து கொள்வார்கள்! மூளைச் சலவை அத்தனை வசீகரமானது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்.
ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்
நம்மூர் சாமியார்களைப் போல் வெளிநாடுகளிலும் சாமியார்களின் பின் அலையும் பித்துப் பிடித்த கூட்டம் உண்டு. இந்த வகை சாமியார்களையும் அவர்களின் இயக்கங்களையும் வெளிநாடுகளில் 'cult' என்று அழைக்கிறார்கள். 'கல்ட்'என்றால் புதிய மதம் என்பதுதான் அர்த்தம். ஆனால் இப்போது அந்த வார்த்தை ஏதோ 'கெட்ட' வார்த்தை போல் மாறிவிட்டது.

வசீகரம் மிகுந்த ஒரு போலிச்சாமியார், தன்னையே கதியென்று வந்து சேர்ந்த பக்தர்களை எந்தளவுக்கு மூளை சலவை மூலம் அடிமையாக மாற்ற முடியும் என்பதற்கு ஜோன்ஸ் மிக நல்ல (கெட்ட) உதாரணம். 

அது 1978, நவம்பர் 18. அமெரிக்காவின் தென் பகுதியில் இருக்கும் கயானாவில் இருக்கிறது, 'ஜோன்ஸ்  டவுன்'. அங்கு 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்டம் பரவசத்தோடு காத்துக் கிடக்கிறது. உயரமான மேடை... பக்திப் பாடல்களை ஒலிபரப்பியபடி ஒலிபெருக்கிகள்...

மொத்தக் கூட்டமும் மேடையை நோக்கியபடியே இருந்தன. மேடையில் இருந்த ஜோன்ஸ் தனது கம்பீரமான மனதை இளக்கும் குரலில்...

''என் பிள்ளைகளே! இன்று நாள் எந்த நாள் என்று தெரியுமா? நமது சந்திப்பு, கடைசி சந்திப்பு. ஆம்! இந்த பூமியில் நாம் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் கடைசி சந்திப்பு! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?  

இன்றோடு நாம் எல்லோரும் இறக்கப் போகிறோம். தப்பிக்க வழியே இல்லை. நாம் உயிர்த்தியாகம் செய்யாவிட்டால் விளைவுகள் மிகக் கொடுமையாக இருக்கும். வெளியுலகில் இருந்து எல்லா தீயசக்திகளும், நம்மை அழித்து ஒழித்துவிடுவது என்று தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டன. நம்மை சீரழிக்க வருகின்றன. அவற்றிடம் இருந்து தப்பப் போகிறோமா? அல்லது சிக்கி சீரழியப் போகின்றோமா? இல்லை எல்லாவற்றிலும் மேன்மையான இறைவனை சரணடையப் போகிறோமா?"

கூட்டம் அமைதியாக இருந்தது. அனைவரின் கண்களிலும் நீர் கசிந்திருந்தது.

''என் குழந்தைகளே! நான் உங்கள் மீது கொண்ட அன்பு உண்மையானது. பரிசுத்தமானது. அதே போல் என் மீது நீங்கள் அன்பு வைத்திருப்பது உண்மையானால்... நான் சொல்வதை செயல்படுத்துங்கள். என்னோடு உயிர் விட தயாராகுங்கள். இது இறைவனின் இணையற்ற கட்டளை. அதனால் கவலை வேண்டாம்!

"நம் இறப்போடு நம் பயணம் இங்கேயே முடிந்து போய் விடுவதில்லை. நாம் எல்லோருமே மீண்டும் உயிர்த்தெழுவோம்! அதுவும் நாளைக்கே நடக்கும்! 

நாம் மீண்டும் பிறப்பெடுப்பது புதியதோர் உலகில்... அது சொர்க்கம் போல் இன்பமான உலகம். அங்கே பசியில்லை... பட்டினியில்லை... துன்பமில்லை... துயரமில்லை... எங்கும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் உலகம் அது. நமக்கென்றே சிருஷ்டிக்கப்பட்ட தனி உலகம். நம்மைத் தவிர வேறு யாரும் அந்த உலகை அடைய முடியாது. புது உலகின் இன்பங்களை மட்டுமே அனுபவிக்க போகும் பாக்கியவான்கள் நாம். பூமியில் நாம் கண்டது எல்லாமே சிற்றின்பங்கள்தான். அங்கே நாம் அடையப் போவது பேரின்பம். சொர்க்கலோகமான அந்த புதிய உலகில் மீண்டும் நாம் நாளை சந்திப்போம். என்னருமைக் குழந்தைகளே! நாளை நம்முடையது... நரகமான இந்த உலகை விட்டு, என்னுடன் சொர்க்கத்துக்கு வருவீர்களா...!'' கல்லும் கசிந்துருகும் பேச்சு ஜோன்ஸினுடையது.

கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் இருந்தது. சத்தமாக, கோரஸாக,

''வருவோம்... வருவோம்...!'' என்று இடிபோல் முழங்கியது. எல்லோரும் மனம் விட்டு அழுதார்கள்.

துன்பம் நிறைந்த. அழிவின் விளிம்பில் இருக்கும் பூலோகத்தில் இருந்து நம்மை மீட்டுச் செல்லும் மீட்பர் இவர்தான் என்று எல்லோரும் நம்பிக்கையோடு கட்டளைக்கு காத்துக் கிடந்தனர். 

கூட்டத்தின் முன் பெரிய ட்ரம்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அந்த ட்ரம்களில் சயனைடு கலக்கப்பட்ட மினரல் வாட்டர் நிரப்பப்பட்டிருந்தன. சயனைடு என்பது கொடுமையான விஷம். குடித்தால் உயிர் பிழைக்க வழியே இல்லை. 100 சதவீத மரணம் உறுதி.

அந்த சயனைடு தண்ணீருடன் எலுமிச்சை சாறு கலக்கப்பட்டது.

எல்லாம் தயாராக இருந்தது.

''இந்த பானம் சொர்க்க பானம். நம்மை வேறு ஒரு புனித உலகத்துக்கு அனுப்பி வைக்கும் அற்புத பானம். இதைக் குடித்த அடுத்த நிமிடமே பூமியின் விடுதலையான மரணம் சம்பவிக்கும். எனவே, புனிதம் நிறைந்த இந்த நீரை கட்டுப்பாடு குலையாமல் ஒவ்வொரு குடும்பமாக வரிசையில் வந்து பானத்தை பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்குதான் எப்போதும் முன்னுரிமை. அதனால் குழந்தைகளுக்கு முதலில் பானத்தைக் கொடுங்கள். அவர்கள் பூமியில் இருந்து விடுதலையானதும், அடுத்துப் பெண்கள். அவர்களுக்கு அடுத்தே ஆண்கள்...'' ஒலிபெருக்கியில் ஜிம்ஜோன்ஸின் கட்டளை அதிரடியாய் முழங்குகிறது.
குடும்பம் குடும்பமாக
கூட்டம் வரிசையில் நின்றது. பெற்றோர்கள் விஷக் குடிநீரை வாங்கி ஏதும் அறியாமல், கள்ளம் கபடமில்லாமல், பொக்கை வாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் வயதுக்கு வந்த பெரிய குழந்தைகள் வரை குடிக்க வைத்தார்கள். பால் குடி மறவாத குழந்தைகளுக்கு சிரிஞ்ச் மூலம் சயனைடு நீரை புகட்டினார்கள்.

ஓரளவு விவரம் தெரிந்த சிறுவர்கள் முரண்டு பிடித்தார்கள். தப்பியோட முயற்சித்தார்கள். அவர்களைப் பிடித்து வந்து வலுக்கட்டாயமாக விஷநீரைக் குடிக்க வைத்தார்கள். பத்து நிமிட நேரத்திற்குள் எல்லா குழந்தைகளும் மரணத்தை தழுவி இறந்தார்கள்.
அடுத்து பெண்கள் முறை தாய், சகோதரி, மனைவி, காதலி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லா பெண்களுக்கும் அவர்கள் குடும்பத்து ஆண்கள் விஷ நீரைக் கொடுத்தார்கள். அடுத்த சில நொடிகளிலே பெண்கள் தள்ளாட தொடங்கினார்கள். அவர்களை கைத்தாங்கலாக அழைத்துப் போய் வரிசையாக புல்வெளியில் படுக்க வைத்தார்கள். அதற்கு அருகே ஏற்கனவே இறந்த குழந்தைகளின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டன. 

பின்பு எஞ்சியிருந்த ஆண்கள் அனைவரும் சயனைடு நீரைப் பருகினர். சில ஆண்களுக்கு இந்த கொடூரத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று கடைசி நிமிடத்தில் ஞானோதயம் தோன்றியது. அப்படிப்பட்டவர்கள் விஷநீரைக் குடிக்க மறுத்தனர். அவர்களை ஜிம்ஜோன்ஸின் சிஷ்யர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டிக் குடிக்க வைத்தார்கள்.

பக்தர்கள் அனைவரின் உடலும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. இப்போது ஜோன்ஸின் சிஷ்யர்கள் விஷநீரை சர்பத் போல் ருசித்து அருந்தினார்கள்.

தன் கண்முன்னே ஆயிரக்கணக்கான பக்தர்கள் துடிதுடித்து உடல் அடங்குவதை மேடை மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஜோன்ஸ். எல்லோரது மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் வழிந்திருந்தது.
''முயற்சித்தேன்... முடிந்தவரை முயற்சி செய்து விட்டேன்'' என்று உரக்கக் கத்திய ஜோன்ஸ், தன் நெற்றி பொட்டில் கைத் துப்பாக்கியை வைத்து விசையை அழுத்தினார். மறுவினாடி மூளை சிதற, ஜோன்ஸ் உயிரும் பிரிந்தது. 

உலகில் 1,500 பேர் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்டது இங்குதான் நாட்டில் பொருளாதார பிரச்சினைகளும், மக்கள் மத்தியில் ஒருவித மன உளைச்சலும், விரக்தியும் காணப்படும்போது, இது போன்ற புதிய இயக்கங்கள் உருவாகும். மக்கள் திசை மாறிப் போவார்கள் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

இந்தியாவும் இப்படிப்பட்ட சூழ்நிலையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் நாட்டைப் பற்றி கவலைப்படாமல், அளவுக்கு மீறி சொத்து சேர்க்கும் போது இத்தகைய 'கல்ட்'கள் தோன்றும் அபாயம் இருக்கிறது.

அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகளின் மூளைச் சலவையில் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது.
=====

குறிப்பு:
ஜிம் ஜோன்ஸ் பேசும் வசனங்கள்'மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்!'நூலிலிருந்து பயன்படுத்தப் பட்டது

Sunday 27 January 2019

உலக அதிசயங்களும்,உருவான விதமும்!!!(World's Seven Wonders)

உலக அதிசயங்களும்,உருவான விதமும்!!!(World's Seven Wonders)

எல்லோருக்கும் வணக்கம், உலக அதிசயங்கள் எவை எவை என்பது பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு உலக அதிசயங்களை முதன் முதலில் பட்டியளிட்டவர் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. கிரேக்க நாட்டை (தற்போதைய கிரீஸ்) சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தான் உலகில் முதன் முதலில் உலக அதிசயங்கள் பட்டியளிட்டவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் இது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்...,! 

அரேபியர்களின் நாகரீங்கள் மற்றும் அவர்களின் பெருமைகள் பற்றி உலகம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் கூட அலெக்ஸாண்டரின் பெர்சிய படையெடுப்பிற்கு பிறகுதான் அரேபியர்களின் பெருமைகள் அதிக அளவில் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது என்று சொன்னால் மிகையில்லை. கி.மு. 323-ஆம் ஆண்டு அலெக்ஸாண்டரின் மறைவுக்கு பின்னர் கிரேக்கத்தில் தோன்றிய புகழ் பெற்ற நாகரீகம் ஹெல்லினிஸ்டிக் நாகரீகம் (Hellenistic Civilization; கி.மு.323-146) ஆகும். ஹெல்லினிஸ்டிக் நாகரீகத்தை சேர்ந்த நாடோடி மக்களில் சிலருக்கு அலெக்ஸாண்டரின் பெர்சிய படையெடுப்பின் மூலம் அரேபியர்களின் வியக்கத்தகு கட்டடங்கள் பற்றி தெரியவந்தது இதனால் அவற்றை நேரில் பார்க்கும் ஆர்வம் கொண்டு மத்தியதரைக்கடலை சுற்றி அமைந்துள்ள நகரங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.


பயணத்தின் போது அவர்கள் கண்டு வியந்த இடங்கள் மற்றும் கட்டங்களை தங்களிடமிருந்த கைக்குறியேடுகளில் குறித்து வைத்துக் கொண்டனர், அவற்றில் சில முக்கியமான இடங்களையும் கட்டிடங்களையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டி அவற்றை பார்க்க வேண்டிய இடங்கள் (Things to be seen) அல்லது பார்வை (Sights) என்கின்ற தலைப்பில் பட்டியலிட்டனர். எண்ணிக்கையானாலும் சரி இடங்கலானாலும் சரி ஒவ்வொரு பயணிகளின் பட்டியலும் இன்னொரு பயணிகளின் பட்டியலிலிருந்து வேறுபட்டது என்று தான் சொல்லவேண்டும். இது தான் உலக அதிசயப்பட்டியல் உருவாவதற்கான முன்னோடி சிந்தனை ஆகும்.


கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் புகழ் பெற்று விளங்கிய அண்டிபாட்டர் (Andipater) என்ற கவிஞரின் கைகளில் இந்த பட்டியல் அடங்கிய குறிப்புகள் ஒரு நாள் தற்செயலாக கிடைக்க, ஆர்வமடைந்த அவர் அந்த இடங்களை நேரில் சென்று பார்த்துவிடும் முடிவுகொண்டு குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார். பயணமுடிவில் கி.மு. 140-ஆம் ஆண்டு அவர் எழுதிய கவிதை ஒன்றில் ‘அதிசயங்கள்-7’ என்ற தலைப்பில் கிசாவின் பெரிய பிரமிட் (எகிப்து, கி.மு-2680), பபிலோனின் தொங்கு தோட்டம்  (Iraq, கி.மு.600), ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை (Greece, கி.மு-433), ஆர்ட்டெமிஸ் கோயில் (Turkey, கி.மு.350(பழையது) & கி.பி.550(புதியது), மௌசோல்லொஸின் மௌசோலியம் (Turkey, கி.மு.350) ரோடொஸின் கொலோசஸ் (Greece, கி.மு.280), அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம் (Egypt, கி.மு.300) ஆகிய ஏழு இடங்களின் கட்டுமானம் பற்றி வியந்து குறிப்பிட்டார். நாளடைவில் அதிசயங்கள்-7’ என்பதற்கு முன்னால் ‘உலகம்’ என்ற சொல் ஒட்டிக்கொண்டு உலக அதிசயங்கள்-7’ என்று அழைக்கப்பட்டது, இதுதான் ஆதாரப்பூர்வமான முதல் உலக ஏழு அதிசயபட்டியல் ஆகும்.


அண்டிபாட்டருக்கு முன்பு ஹீரோடோதஸ் (Herodotus, கி.மு.484-425) என்ற துருக்கியை சேர்ந்த வரலாற்று ஆசிரியரும், கல்லிமாக்ஸஸ் (Callimachus, கி.மு.310-240) என்ற லிபியாவை சேர்ந்த கவிஞர் ஒருவரும் இத்தகைய பட்டியலை எழுதிவைத்திருந்தார்கள் என்று சில குறிப்புகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் கூட இதுவரையில் உறுதியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை மேலும் இவர்கள் எந்தெந்த இடங்களை பட்டியளிட்டார்கள் என்ற தகவலும் இல்லை. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதிவரை ஆண்டிபாட்டர் பட்டியலிட்ட ஏழு அதிசயங்கள் தான் உலக அதிசயங்களாக வழக்கத்தில் இருந்தது.


ஆண்டிபாட்டர் உலக அதிசயங்களை ஏழோடு நிருத்திக்கொண்டதற்க்கு ஒரு காரணம் உண்டு. மனித உடலில் உள்ள உயிர்த்துளைகள் ஏழு, வானவில்லின் நிறங்கள் ஏழு, இசையை உண்டாக்கும் ஸ்வரங்கள் ஏழு இப்படி இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்திலும் ஏழு என்பது முக்கிய எண்ணாக இருப்பதால் ஏழு என்ற எண்ணை ஒரு மந்திரச்சொல்லாகவே கிரேக்கர்கள் கருதினார்கள் இதன் காரணமாகவே அதிசயங்களும் ஏழாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று ஏழுடன் நிறுத்திவிட்டார் ஆண்டிபாட்டர். அன்றிலிருந்து இன்றுவரை உலக அதிசயங்கள் ஏழாகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பதினாறாம் நூற்றாண்டு வரை ஆண்டிபாட்டர் பட்டியலிட்ட அதிசயங்கள் தான் உலக அதிசயங்களாக வழக்கத்தில் இருந்தன. எகிப்து பிரமிடைத் தவிர ஏனையவை அழிந்துவிட்டதால் பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகு சில எழுத்தாளர்கள் உலக அதிசயங்கள் என்று வேறு சில இடங்களை பரிந்துரை செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் கோபான் ப்ரீவர் (Cobhan Brewer) என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர் 1870-ஆம் ஆண்டு வேற்றுமொழி சொல்களுக்கான விளக்கம், பழமொழி விளக்கம், விடுகதை விளக்கம், மற்றும் சில வரலாற்று புள்ளிவிபரங்கள் அடங்கிய Brewers Dictionary of Phrase & Fable என்ற அகராதி (Dictionary) ஒன்றை வெளியிட்டார்.


ப்ரீவரின் அந்த அகராதியில் இடைக்காலத்தில் கட்டப்பட்ட சில கட்டிடங்களும் நவீன காலத்தில் கட்டப்பட்ட சில கட்டிடங்களும் (ஸ்டோன் ஹெஞ் (England), சிச்சென் இட்சா பிரமிட்(Mexico), கொலோசியம் (Italy, Rome), சீனப்பெருஞ்சுவர் (China) , பைசா நகர் சாய்ந்த கோபுரம், தாஜ் மஹால் (India), எம்பயர்ஸ்டேட் கட்டிடம் (America), ஈபெல் கோபுரம்(France)) புதிதாக உலக அதிசயங்களுக்கான தகுதியான கட்டிடங்களாக பரிந்துரை செய்யப்பட்டன இதில் தான் முதன் முதலாக இந்தியாவின் தாஜ்மஹால் உலக அதிசயங்களுக்கான பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சில நூற்றாண்டுகளாக அதிகாரபூர்வமற்ற உலக அதிசயபட்டியல் வழக்கத்தில் இருந்தது.


இந்நிலையில் 1999-ஆம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த பெர்னார்ட் வெபர் என்ற திரைப்பட இயக்குனர் அதிகாரப்பூர்வமான புதிய ஏழு உலக அதிசயங்களை கொண்டபட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக அவர் நியூ வொண்டர்ஸ் என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தினார். 2001-ஆம் ஆண்டு புதிய பட்டியல் தயாரிக்கும் பணிக்கான இணையதளம் துவங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து புதிய உலக அதிசயங்களுக்காக போட்டியிடும் நினைவுச் சின்னங்களுக்கான விண்ணப்பங்கள் 2005-ஆம் ஆண்டு நவம்பர்-24,வரை பெற்றுக்கொள்ளப்பட்டது, உலகம் முழுவதிலும் இருந்து 177-நினைவு சின்னங்கள் பரிசீலனைக்கு வந்ததாகவும் அவற்றில் 21-தளங்களை மட்டும் உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை வல்லுனர்களை கொண்டு போட்டிக்கு தகுதியானவை என்று தேர்ந்தெடுத்ததாகவும் நியூ வொண்டர்ஸ் அறக்கட்டளை ஜனவரி 1, 2006-ல் அறிவித்தது.


இந்த 21-தளங்களில் உலகின் பண்டைய உலகஅதிசயபட்டியலில் இடம் பிடித்திருந்த எகிப்து பிரமிடும் ஒன்று, எகிப்திய மக்கள் பிரமிடை ஓட்டேடுப்பிற்க்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்ததால் பிரமிடு மதிப்புமிக்க தளமாக கருதப்பட்டு ஓட்டேடுப்புபட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து எஞ்சியிருந்த 20-தளங்கள் மட்டும் மக்களின் ஓட்டேடுப்பிற்க்காக விடப்பட்டது. 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓட்டேடுப்பு முடித்துக்கொள்ளப்பட்டு 2007-ஆம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள லிஸ்பன் நகரில் வெற்றி பெற்ற புதிய ஏழு உலக அதிசயங்களாக சிச்சென் இட்சா (Mexico), மீட்பர் கிறிஸ்து சிலை (Brazil), கொலோசியம் (Rome), சீனப்பெருஞ்சுவர் (China), மாச்சு பிச்சு (Peru), பெட்ரா (Jordan), தாஜ் மஹால் (India)ஆகியவை அறிவிக்கப்பட்டது.


பதிவுகள் குறித்த உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பர்களே மறக்காமல் உங்கள் வாக்குகளை கீழே உள்ள ஒட்டுப் பட்டைகளில் பதிவு செய்துவிட்டுச் செல்லுங்கள் உங்களது ஓட்டுக்கள் இப்பதிவு அதிக நண்பர்களை சென்றடைய உதவிடும் என்பதை மறக்க வேண்டாம். நன்றி மீண்டுமொரு சிறந்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் வணக்கம்.