Saturday 30 June 2018

பில் கேட்ஸ் வரலாறு (Bill Gates History)

Bill Gates History in Tamil





பில் கேட்ஸ் (William Henry Bill Gates III) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம். ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்?கொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வுளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான்... ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான் 'கணினி உலகம்' என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்...



கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமைக் கணினி மென்பொருளாரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன “பில் கேட்ஸ்” தொடர்ந்து பல வருடங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலேயே இருந்து வருகிறார்.

1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்லியன்கள் ஆகும். இன்று இவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள், 105 நாடுகளில் சேவை புரிகின்றனர். உலகில் தற்போது உயிருடன் இருப்போரில் மைக்ரசொஃப்ட் நிறுவனரும் பெரும் கொடையாளியுமான பில் கேட்ஸ் தான் அனேகமானோரால் விரும்பப்படும் மனிதர் என்று சர்வதேச ஆய்வொன்று கூறுகிறது. சிறுவயதில் இருந்து கணினி மென்பொருள் துறையில் சுய விடாமுயர்ச்சியினால் முன்னேறி வெற்றி வாகை சூடி உலகக் கோடீஸ்வரர் எனப் பெயர்பெற்ற மைக்ரோசொப்ட் அதிபர் பில்கேட்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம் .
பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு:-1955ஆம் ஆண்டு  அக்டோபர் 28-ஆம் நாள் அமெரிக்காவில் சியாடில் (Seattle) என்ற ஓர் அழகிய அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் நகரில்  பிறந்தார் வில்லியம் ஹென்றி கேட்ஸ் அவருக்கு 2 சகோதரிகள், தந்தை "வில்லியம் கெச் கேட்ஸ்" ஒரு சிறந்த வழக்கறிஞர் தாயார் "மேரி மேக்ஸ்வெல்" வாசிங்டன் (Washington) பல்கலைக்கழகத்தின் பள்ளி ஆசிரியை.


இவர்களின் மகனான பில் கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார். ஆரம்பித்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில்கேட்ஸ் தனிமையை அதிகம் விரும்புவார். எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார் சக வயது மாணவர்கள் விரைவுக் கார்களையும் திரைப்படங்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருக்க பில்கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும் அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பார் வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலேயே துளிர்விடத் துவங்கியது.


பில் கேட்ஸ் தனது பதி்மூன்றாவது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடசாலையான லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணனி ஆர்வமும் திறைமையும் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார். பாடசாலையில் முதலாவது மாணவனாக பில் கேட்ஸ் திகழ்ந்ததால் இவர் ஆசிரியர்களின் செல்ல மாணவனாக திகழ்ந்தார்.


அக்காலத்தில் அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் கூடக் கணினி ஓர் ஆடம்பரப் பொருளாக, அனைவருக்கும் எட்டாத ஒரு கருவியாக இருந்தது. லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது General Electric நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது. மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். 


பில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை டிக்-டக்-டே விளையாட்டுக்காக எழுதினார், அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வழி வகுத்தது. இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின் இயங்கு தளத்தில் (Operating System) உள்ள ஒட்டைகளை பயன்படுத்தி அதிக கணினி நேரத்தை உபயோகித்தாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.


அப்போது கணினியை பயன்படுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் பில் கேட்ஸும் அவன் நண்பன் பால் ஆலனும்(Paul Allen) ஆவர். இவர்களில் பில்கேட்ஸ் எட்டாம் வகுப்பு மாணவனாகவும் பால் ஆலன் பத்தாம் வகுப்பு மாணவன் ஆகவும் இருந்தனர். ஆனால் கணினிக் கல்வியைக் கற்பதில் இருவருக்கும் தணியாத ஆர்வம், தீராத தாகம். ஆனால் அவர்களின் பாடசாலையில் திறமையான கணினி ஆசிரியர் கூட அப்போது இருக்கவில்லை. இருப்பினும் இரு நண்பர்களும் ஆசிரியர்களே வியக்கும் வகையில் தங்களின் கணினி அறிவை வளர்த்துக் கொண்டார்கள். கணினித் தொழிற்பாடு பற்றிய நூல்களை எல்லாம் ஆர்வமாக தேடித் படித்தார்கள்.


ப்ரோக்ராம்மிங் (Programming) மொழியில் இவர்களுக்கு தனி வெறியே ஏற்பட்டுவிட்டது எனலாம். இதனால் இவர்களுக்கு இரவு, பகல் என்று கிடையாது. பாடசாலை நேரம், விடுமுறை என்று கிடையாது. கடும் பயிற்சியில் இருவரும் ஈடுபட்டனர். நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் ப்ரோக்ராம்மிங் மொழிகளை உருவாக்க பில் ஆர்வம் கொண்டான். சுருக்கச் சொன்னால் கணினியால் இருவரும் புகுந்து விளையாடிப் புதுமைகள் காண விரும்பினர்.



ஆனால் அக்கால கட்டத்தில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி நெருக்கடி காரணமாக பிள்ளைகளின் பெற்றோர்களிடம் நிதி அறவிட்டு செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது மட்டுப்படுத்தப்பட்ட நேரம் வழங்கப்பட்டது. அது பில்லுக்கு போதுமானதாக காணப் படவில்லை.


பாடசாலையில் கணினிக்கல்விக்கு ஆபத்து நேரிட்ட போதும் பில்லும், பாலுவும் பல்கலைக்கழக இளைஞர்களின் ஸி.ஸி.ஸி நிறுவனத்துடன் இணைந்து கொண்டார்கள். இவர்கள் அவர்களைவிடச் சிறியவர்களாக காணப்பட்டமையால் இவர்களின் திறமையில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனாலும் பில்லுக்கும், பாலுக்கும் மீண்டும் நீண்ட நேரம் கணினியுடன் உறவாட வாய்ப்புக் கிடைத்தது.


பாடசாலைக் கல்வியை முடித்த பிறகு மேல் படிப்பை தொடர்ந்து அப்பாவைப்போல் வக்கீலாகி விட வேண்டும் என்று குடும்பத்தினரும் உறவினர்களும் வற்புறுத்தினர். ஆனால் பில்லின் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட கணினிக் கனவுகள், கணினி ப்ரோக்ராம்மிங் யை சுற்றி சுற்றி வந்தன.


பில்லும், பாலும் அங்கு உள்ளவர்களை விடத் திறமையாக நேரகாலம் பாராது வேலை செய்த போதும் அவர்களுக்கு மாணவர்களுக்குரிய கொடுப்பனவே வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் பணத்திற்காக அங்கு வேலை செய்யவில்லை. கணினியுடன் வேலை செய்யும் வாய்ப்புக்காக பணியை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதில் வெற்றி கண்டனர். 


இதன் பின்னர் பாடசாலை இறுதித் தேர்விலும் சிறப்பாக வெற்றி பெற்றார் பில். ஆனால் பாலு பாடசாலைக் கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டான். மேலும் பில் பெற்றோர்களின் விப்பத்திற்கு இணங்க வக்கீல் கல்வியை அவரால் தொடர முடியாத நிலையில் இடைநிறுத்தினார்.


அதன் பின்னர் பில்லும் பாலும் ஒரு கணினி நிறுவனத்தை ஆரம்பித்து பற்றி கனவு காண்பார்கள். திட்டம் தீட்டுவார்கள். விவாதிப்பார்கள்.ஆனால் நிதி நெருக்கடியினால் அவர்கள் திட்டத்தை தள்ளிப் போட்டு விட்டார்கள்.


அவர்களிடம் ஆசை, ஆற்றல், அறிவு,  அனுபவமும் இருந்தது ஆனால் காலம் மட்டும் கனியவில்லை. 1974 ம் ஆண்டு இன்டெல் (intel) நிறுவனம் புதிய Micro Processor யை அறிமுகம் செய்தது. அதன் ப்ரோக்ராம்மிங் பணிக்கு அந்நிறுவனம் பில், பால் இடமும் உதவியை நாடியது. இச்சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் COBOL, FORTRON, PASCAL போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற அவர்கள் BASIC முறையில் ப்ரோக்ராம்மிங் எழுத ஆரம்பித்தனர்.


அனால் இப்பணியை "விரைவாக, பிழையின்றி, மற்றவர்களை முந்திக்கொண்டு, சரியாக முடிக்க வேண்டும்", என்று எண்ணினார்கள். அல்லாவிட்டால் தமது இரவு பகல் பாராது உழைத்த கடினமான உழைப்பு பயனற்றுப் போய்விடும் என்று எண்ணினார்கள். 

இவர்களின் விடாமுயற்சியினால் எழுதப்பட்ட ப்ரோக்ராம்மிங் ஆனது பரிசோதித்து பார்க்கப்பட்டது. முயற்சி வெற்றி கண்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த பில்லின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அப்போது பில்லுக்கு இருபது வயது .இந்த வெற்றியின் திருப்பு முனை அவர்களை உலகறியச் செய்தது.

1977 ஆம் ஆண்டு ஆல்புகர்க் நகரின் மிகப் பெரிய அடுக்கு மாடிக் கட்டடத்தின் எட்டாவது மாடியில் ஒரு அறையில் இவர்கள் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தை ஆரம்பித்தனர். அந்த அறையில் அங்கும் இங்குமாகக் கணினிகள் கிடந்தன. விசைப்பலகைகளில் சில விரல்கை விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரைப்பிரைட்டரில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

திடீரென புயல் போல ஒரு பையன் அந்த அறைக்குள் நுழைந்து நிர்வாகியின் அறைக்குள் போய்க் கொண்டிருந்தான். ஹலோ..ஹலோ ..யாரது? முதலாளி ஊரில் இல்லை என உரக்க குரல் கொடுத்தார். ஏனெனில் வெளியார் யாரும் அந்த அறைக்குள் நுழையக் கூடாது என்பது உத்தரவு. அவனோ கதிரையில் அமர்ந்து கணினியில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். அந்தப் பெண் புதிதாக நியமனம் பெற்றவள்.

அவள் வேகமாக தனது அலுவலகரை நோக்கிச் சென்று சார் யாரோ ஒரு பையன். அவள் முடிக்கவில்லை அவர் சிரித்தபடி பையனா? அவர் தான் இந்தக் கம்பனியின் முதலாளி பில்கேட்ஸ் என்றார். அந்தப் பெண்ணின் விழிகள் வியப்பில் விரிந்தன. இருபது வயது இந்த சின்ன பெடியன் இக் கம்பனியின் முதலாளியா? நம்பவே முடியவில்லை? ஆனால் உண்மை அதுதான்.

அச்சிறிய கம்பனி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது. தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் திறமை மதிப்பிடப்பட்டு திறமைக்கேற்றவாறு ஊக்கிவிப்பு பரிசில்கள், சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் என்பன வழங்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும். கடினமாக, தீவிரமாக முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி வேலை செய்ய முடியாதவர்களை இந்த இடம் உங்களுக்கு ஏற்றதல்ல என்று சொல்லி வெளியே அனுப்பிவிடுவாராம்.

1981-ஆம் ஆண்டில் IBM கணினிகளுக்கான MS-DOS என்ற  Operating System அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார்,அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS-DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார் ஃபில்கேட்ஸ்...அது ஏற்றுக்கொள்ளப்பட்டு 80களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின விற்பனையாகும் ஒவ்வோரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் ஃமைக்ரோசாப்ட்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.

'மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே' என்ற சொற்றொடர் கணினி உலகத்திற்குதான் மிகவும் பொருந்தும். அதை உணர்ந்துதான் போட்டியை எதிர்பார்த்துதான்  ஃமைக்ரோசாப்ட் நிறுவனமும் புதிய புதிய மென்பொருள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. IBM கணினிகளுக்கு போட்டியாக மவுஸ் கொண்டு இயக்கும் ஆப்பிள் கணினிகள் அறிமுகமானபோது அது மிகவும் பிரபலமடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,உலகின் மொத்த கவணமும் ஆப்பிள் பக்கம் திரும்பியபோதும் அசரவில்லை பில்கேட்ஸ். அசுர வேகத்தில் ஃமைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற இயங்குதளத்தை அறிமுகம் செய்தார் அது இமாலய வெற்றிப் பெற்றது .

பில்கேட்சிடம் உள்ள ஒரு நல்ல அம்சம் தொழிலாளர், நிர்வாகி, முதலாளி என்ற இரும்புத் திரைப் பிரிவு வேறுபாடுகள் இல்லை. எல்லோரும் கலந்து பழகலாம், ஆலோசனை வழங்கலாம். மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய மெலிண்டா பிரெஞ்ச் என்ற பெண்ணை நேசிக்கத் தொடங்கினார். கண்டதும் காதல் என்று கொள்ளாது ஐந்து வருடங்களுக்கு மேலாக நெருங்கிப் பழகிய பின்னர் அந்த நட்பு காதலாக மலர்ந்தது. அவள் அழகைவிட அறிவால், உழைப்பால் உயர்ந்தவள். சுறுசுறுப்பானவள், கலகலப்பான இயல்பு உடையவள்.

அது மட்டுமல்லாமல் 90களின் தொடக்கத்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது இணையம். இணையத்தில்  உலா வர உதவும் (உலவி) 'நெட்கேப்ஸ்' (net cafe) என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன் என்பவர். இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து கொண்ட பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார், ஆனால் அதை விற்கவோ ஃமைக்ரோசாப்ட்டுடன் இணையவோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே  மீண்டும் தன் மந்திரத்தை நிகழ்த்திக் காட்டினார் ஃபில்கேட்ஸ்,

நெட்கேப்ஸ்க்கு இணையான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணையச் செயலியை உருவாக்கி அதனை புதியக் கணினிகளுடன் இலவசமாக விநியோகம் செய்தார் அதனால் விலைக்கு விற்கபட்டு வந்த நெட்கேப்ஸின் இணைய ஆதிக்கம் மங்கத் தொடங்கியது அதுமாதிரியான விற்பனை தந்திரம் முறையற்றது என்று  ஃமைக்ரோசாப்ட்டின் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் ஃபில்கேட்ஸை அசைக்க முடியவில்லை. என்ன வந்தாலும் பில்கேட்ஸுக்கே வெற்றி கிடைக்கும் ஏனென்றால் பில்கேட்ஸின் போட்டியாளர்கள் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்களை ஆனால் பில்கேட்ஸ் குறி வைப்பதோ சாமானியர்களை.

பில் கேட்ஸ் ஜனவரி 1, 1994 ஆம் வருடம் மெலிண்டாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெனிபர் காதரின், போஃப் அடேல் என்று இரு மகள்களும் ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

1999-ஆம் ஆண்டு 'Business at the speed of thought' என்ற நூலை எழுதினார்  ஃபில்கேட்ஸ் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் விற்பனையாகிறது அந்த நூல், அதற்குமுன் அவர் எழுதிய The road a head என்ற நூலும்  அதிகமாக விற்பனையாகிறது 2 நூல்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு தொகையையும் அற நிதிக்கு வழங்கியிருக்கிறார் பில்கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸ் என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்து கொண்டார் பில்கேட்ஸ், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பில்கேட்ஸும் மனைவியும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிக்காக வழங்கியிருக்கின்றனர்.


விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள்  கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.  இப்பொழுது விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம்.இ(ME) மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.


நாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்!


நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோதவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

 - பில் கேட்ஸ்


"பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே" என்பதற்கு பில் கேட்ஸ் (Bill Gates) ஒரு மிகச்சிறந்த எடுத்துகாட்டு.


    

No comments:

Post a Comment