Monday 14 January 2019

படிப்பவரை குலை நடுங்கவைக்கும் சைக்கோக்கள் பகுதி-2

படிப்பவரை குலை நடுங்கவைக்கும் சைக்கோக்கள் பகுதி-2



ஏமி ஆர்ச்சர் கிலிகன்

சீரியல் கில்லர் வரலாற்றில் ஏகப்பட்ட பெண்களும் இடம்பிடித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் ஆர்ச்சர். 1868–ல் அமெரிக்காவில் பிறந்தவர். வயதானவர்களைப் பராமரிக்கிறேன் என ஒரு இல்லத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவரது முதல் இரண்டு கணவர்களும் இறந்து போயிருந்தனர்.

இவருடைய முதியோர் இல்லத்தில் வருபவர்கள் கொஞ்ச நாட்கள் நன்றாக இருந்து விட்டு சட்டென இறந்து விடுவார்கள். சில ஆண்டுகளில் மக்களுக்கு இந்த இல்லத்தின் மீது சந்தேகம் வர, புகார்கள் பறந்தன. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வந்தன. சுமார் 50 பேர் வரை இவரால் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த புலன் விசாரணை சொன்னது. அவர்களில் இவருடைய கணவர்களும் அடக்கம். எல்லோருக்கும் விஷம் கொடுத்து சமாதியாக்கியிருந்தார் ஆர்ச்சர்.

வரும் பணக்கார முதியவர்களிடம் ஒரு பெரும் தொகையை கடனாக வாங்க வேண்டியது, விஷம் கொடுத்து அவர்களைத் தீர்த்துக் கட்டவேண்டியது. இது தான் அவருடைய பதறடிக்கும் ஃபார்முலா!

ஜெஃப்ரி டாமர்

இந்தப் பூனையும் பால் குடிக்குமா ரேஞ்சுக்கு அப்பாவி முகம். இவனுடைய டார்கெட் பெண்களல்ல, ஆண்கள். ஓரினச் சேர்க்கை கொலையாளி இவன். ஆண்களை வீட்டுக்கு வரவழைத்து அவர்களைக் கொல்வான். பின் அவர்களுடைய உறுப்புகளை வெட்டி எடுத்து உணவுக்காக பத்திரப்படுத்துவான். நரமாமிச சைக்கோ இவன்.

18 வயதில் முதல் கொலையை அரங்கேற்றியவன்,அதன் பிறகு நிப்பாட்டவே  இல்லை. குறைந்தது 17 பேரைக் கொன்றிருக்கலாம் என்று கணக்கிட்டாலும், அதை விட மிக அதிகம் என்பது போலீஸ் தரப்பு நம்பிக்கை. இவனுடைய வீட்டில் சோதனையிட்டபோது வீட்டில் இருந்த மனித உறுப்புகளைப் பார்த்து மிரண்டு போய்விட்டனர் காவல் துறையினர்.

1994 நவம்பர் 28–ந் தேதி ஜெயிலில் நடந்த ஒரு சண்டையில் இறந்து போனான்.

பேலா கிஸ்

ஹங்கேரியாவின் சீரியல் கில்லர் இவன். வீட்டைச் சுற்றி நிறைய உலோக டிரம்ஸ் வைத்திருப்பது இவனுடைய வழக்கம். ‘இது என்ன இவ்வளவு பெரிய பாத்திரங்கள்?’ என யாராவது கேட்டால், ‘எரிபொருள் நிரப்பி வைக்கிறேன்’ எனச் சொல்வான். மக்களுக்கு இவனுடைய பாத்திரங்கள் மேல் ஏதோ ஒரு சந்தேகம்.

கடைசியில் போலீஸ் வந்தது. உலோக டிரம் ஒன்றை திறந்து பார்த்தபோது, உள்ளே பதப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் உடல் இருந்தது. மொத்தம் 24 உடல்கள் அன்று கண்டுபிடிக்கப்பட்டன. 74 பெண்கள் வரை இவன் கொன்றிருக்கலாம் என விசாரணை சொன்னது. போலீஸ் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தப்பி ஓடிய இவன், கடைசிவரை பிடிபடவே இல்லை.

அந்தேரி சிக்காட்டிலோ

ரஷிய நாட்டைச் சேர்ந்த தொடர் கொலையாளி. 1936–ம் ஆண்டு பிறந்தவன். ரெட் ரிப்பர் என்பது இவனுடைய பிரபலமான பெயர்களில் ஒன்று. 1978–க்கும் 1990–க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவன் கொன்று குவித்த பெண்கள் மற்றும்  குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 55.

நல்ல மனநிலையில் இவன் படுகொலைகளை அரங்கேற்றியதாக டாக்டர் சான்றிதழ் கொடுத்தார். அரசு இவனுக்கு மரண தண்டனை விதித்தது. கருணையே இன்றி மக்களைக் கொன்று குவித்த இவன் ரஷிய சுப்ரீம் கோர்ட்டில் கருணை மனு அளித்தான். அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி போரிஸ் எல்ஸ்டினிடம் கருணை மனு அளித்தான். அதுவும் நிராகரிக்கப்பட 1994–ல் கொல்லப்பட்டான்.

ஹார்ப்   சகோதரர்கள்

மிக்காயா ஹார்ப், ஜாஸ்வா ஹார்ப் இருவரும் சகோதரர்கள். 1770 –களில் வாழ்ந்த அமெரிக்காவின் முதல் சீரியல் கில்லர்கள். பல படுகொலைகளை செய்தவர்கள் கடைசியில் பிடிபட்டார்கள். 39 பேரை கொலை செய்ததாக ஹார்ப் ஒத்துக் கொண்டான். ஆனால் குறைந்த பட்சம் 50 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்கிறது காவல்துறை.

கொடூரமாகக் கொலை செய்து தண்ணீரில் போட்டு விடுவது இவர்கள் வழக்கம். இவர்களில் மூத்தவன், தனது பச்சைக் குழந்தை அழுகிறது என எரிச்சல்பட்டு அதை மரத்தில் தூக்கி அடித்துக் கொன்றவன். இவனுடைய கொடூரத்தை விளக்க இது ஒன்றே போதும்.

2 comments: