நமக்கு உணவு அளிக்கும் விவசாயியைப் பற்றி!!!!!
உழவுக்கு வந்தனம் செய்வோம்!
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. விவசாயி 'சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்'.'தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு' என விவசாயத்தின் மகத்துவத்தை திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு விவசாயத்தின் நிலை என்ன?
விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது விவசாயம்.
அரசுவேலை வேண்டாம் :
ஐந்து மன்னனுக்குச் சமம்:
'அணில்தாவா ஆயிரம் தென்னை உடையோன் ஐந்து மன்னனுக்குச் சமம்'. அது எப்படி என்று கேட்டால் 'ஆயிரம் தென்னை மரம் வைத்திருக்கும் ஒரு விவசாயியின் சொத்து, ஐந்து மன்னர்கள் வைத்திருக்கும் சொத்திற்கு சமமானது'. 'ஒரு தென்னைக்கும் மற்றொரு தென்னைக்கும் அணில் தாவ முடியாத அளவிற்கு இடைவெளி விட்டு நட வேண்டும்' என்பது இதன் கருத்து.மேலும் 'நண்டு ஓட நெல் நடணும்; நரி ஓட கரும்பு நடணும்; வண்டி ஓட வாழை நடணும்; தேர் ஓட தென்னை நடணும்' என்பதும் அனுபவம் சார்ந்த விவசாயி சொன்னதுதான். அவர்களுக்கு சென்டி மீட்டர் கணக்கெல்லாம் தெரியாது. இரண்டு சென்டிமீட்டர் இடைவெளி விட்டு பயிர் நடவேண்டும் என்று சொல்வது விவசாயிகளுக்கு புரியாத ஒன்று.நண்டு ஓடி வருமளவிற்கு இடைவெளி விட்டு நெல் நட வேண்டும். நரி ஓடி வருமளவிற்கு இடைவெளி விட்டு கரும்பு நட வேண்டும். (மாட்டு) வண்டி போய் வருமளவிற்கு இடைவெளி விட்டு வாழை நட வேண்டும். தேர் போய் வருமளவு இடைவெளி விட்டு தென்னை நட வேண்டும். அப்படியெனில் ஆயிரம் தென்னை மரங்கள் நட எத்தனை ஏக்கர் நிலம் வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.'கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளர்ச்சி பெறாது' என்பர். நாற்றங்கால் பயிர் என்பது என்ன? நாற்றுப் பாவுதல், தொழி கலக்குதல், பரம்படித்தல், வரப்பு மெழுகுதல், சூடடித்தல், வைக்கோல் படப்பு, மாகாணி, வீசம்படி, மரக்கால், கமலை இறைத்தல், சால், வடக்கயிறு, மேக்கா, கடாணிக்குச்சி, கொழு, சால் போடுதல், நாத்து ஊத்துதல், இன்னும் இதுபோல் நிறைய சொற்களை விவசாய பெருமக்கள் பயன்படுத்துகின்றனர்.
மின்னிப் பயறு :
மின்னி(சிறு)ப்பயறு என ஒன்றுண்டு. வானம் பார்த்த பூமியில் மழைக்காலத்தில் தானாக முளைக்கும் கொடிவகை. வாய்க்கால் வரப்புகளிலும் வளரும். இது பாசிப்பயறு காய் போல அளவில் சிறியதாக இருக்கும். காய் நெற்றாகி தானாக வெடித்துச் சிதறும்.இப்பயறை எறும்புகள் சேகரித்து தன்புற்றுக்குள் சேமிக்கும். இந்த எறும்புப் புற்று இருக்கும் இடத்தை வெட்டினால் அங்கே நிறைய மின்னிப் பயறு இருக்கும். அதை அப்படியே மொத்தமாக அள்ளிக் கொண்டு வருவர்.குறைந்தது கால்படியாவது இருக்கும். இப்பயறை வறுத்து, துவையல் அரைத்தும் சாப்பிடுவர். அப்படியே சாப்பிடவும் செய்வர். இது உடலுக்கு நல்லது என்பர். இதெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும். வாய்ப்பே இல்லை. பீட்சா, பர்கர், சான்ட்விச், ஜூஸ், கூல்டிரிங்க்ஸ் போன்றவைதான் இப்போதைய குழந்தைகளின் உணவுப் பழக்கமாக உள்ளது.
எருவும், இனத்தானும்:
விவசாய பெருமக்கள் நிலத்தோடு மல்லுக்கட்டினர். 'எரு (இயற்கை உரம்) செஞ்சது மாதிரி, இனத்தான்கூட செய்ய மாட்டான்' என்று அதன்மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால்தான், உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். நம் கண்முன்னே நுாறு வயது வரை நோய்நொடி இல்லாமல் வாழ்கின்றனர்.இதுவே அடுத்து வரும் தலைமுறைக்கு வரலாறாக மாறிப்போகும். இயற்கை, விவசாயம் பற்றிய விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினருக்கு நாம் உருவாக்க வேண்டும். அன்று இஷ்டப்பட்டு விவசாயம் செய்தனர். வளமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். இன்று கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, மனஅழுத்தத்துடன் வாழ்கின்றனர்.
நஞ்சை உண்டு :
கவிஞர் நெல்லை ஜெயந்தா தனது புதுக்கவிதையில் விவசாய பெருமக்களைப் பற்றி,'அன்று
நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது.
இன்று
நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது' என, வேதனையுடன் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
'உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' இது பழமொழி. உழவன் கணக்குப் பார்த்தான் என்றால், உலகத்து உயிர்கள்(மனிதன்) ஒன்றுகூட மிஞ்சாது' என்பது புதுமொழி.'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்; வீண் உண்டு ஊழல் செய்வோரை நிந்தனை செய்வோம்
No comments:
Post a Comment