விமானத் துறையில் பொதிந்து கிடக்கும் சுவாரஸ்யங்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் அவ்வப்போது வெளிக்கொணர்ந்து வாசகர்களுடன் பகிர்ந்து வருகிறது. அந்த விதத்தில், விமானத் துறை பற்றிய சுவாரஸ்யங்களை இந்த செய்தியில் காணலாம்.
1903ம் ஆண்டு ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானமானது 120 அடி தூரம் பயணித்தது.
ஆனால், தற்போது வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் போயிங் 777 உள்ளிட்ட விமானங்கள் ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 15,844 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் படைத்தது.
சர்வதேச அளவில் ஆங்கிலம்தான் விமானப் போக்குவரத்துத் துறையின் பொதுவான மொழியாக பேசப்படுகிறது. பைலட்டுகள், விமானங்களை கட்டுப்படுத்தும் பணியாளர்களுக்கு ஆங்கில புலமை என்பது அடிப்படைத் தகுதிகளில் ஒன்று.
விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்தின் கண்ணாடி ஜன்னல்கள் மேலிருந்து கீழ் நோக்கி 15 டிகிரி சாய்மானத்தில் அமைக்கப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். சூரிய வெளிச்சம், விளக்கும் வெளிச்சத்திலிருந்து வரும் பிரதிபலிப்புகளை குறைப்பதற்காக இந்த முறையில் ஜன்னல்கள் அமைக்கப்படுகின்றது.
விமானத்தில் பாதரசம் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. விமானத்தின் பல பகுதிகள் அலுமினியத்தில் தயாரிக்கப்பட்டிருப்பதால், பாதரசத்தால் அதிக பாதிப்படையும் அபாயம் இருப்பதால் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
விமானப் பயணம் என்பது ஆபத்து நிறைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அமெரிக்காவில் விமானத்தில் இறப்பவர்களின் விகிதத்தையும், காரில் பயணிப்பவர்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையையும் வைத்து ஒப்பீடு செய்துள்ளனர்.
அதில், விமானத்தில் பறப்பவர்களில் 11 மில்லியன் பேரில் ஒருவருக்கு விபத்தால் மரணமடையும் வாய்ப்பு இருக்கிறதாம். ஆனால், காரில் பயணிப்பவர்களுக்கு 5,000 பேரில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இங்கிலாந்து, நார்வே மற்றும் சுவீடன் நாடுகளை சேர்ந்த பைலட்டுகளிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஆய்வில் கருத்துக் கூறிய பைலட்டுகளில் பெரும்பாலானோர் விமானம் பறக்கும்போது தூங்கிவிடுவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன், கண் விழித்து பார்க்கும்போது உடன் இருக்கும் துணை விமானியும் தூக்கத்தில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை உலகம் முழுவதும் நடந்த விமான விபத்துக்களில் 80 சதவீதம் அளவுக்கு விமானம் வானில் மேல் எழுந்த 3 நிமிடங்களுக்கு உள்ளாகவும், தரை இறங்குவதற்கு 8 நிமிடங்கள் முன்பாகவும் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, விமானம் டேக் ஆஃப் செய்யும்போதும், தரை இறங்கும்போதும்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
விமானத்தில் பயணிக்கும் 5 பேரில் ஒருவர் பறக்கும்போது அதிக பயத்துடன் இருக்கின்றனர். இதற்கு ஏவியோபோபியா என்று குறிப்பிடப்படுகிறது.
விமான பைலட்டுகள் பறக்கும் நேரத்திற்கு மட்டுமே கணக்கிட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. விமானம் தாமதமாக வரும்போது காத்திருப்பது, விமானம் தாமதமாக புறப்படுவது, விமானம் புறப்படுவதற்கு முன்னர் இருக்கும் பணிகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லையாம்.
அவசர சமயங்களில் விமானத்தின் வெளியேறும் வழிக்கு 5 வரிசைக்கு அப்பால் அமர்ந்திருப்பவர்களுக்கு விமானத்தை வெளியேறுவதில் சிக்கல் இருக்கிறதாம். அதாவது, குறித்த நேரத்தில் அவர்களால் வெளியேறுவது கடினம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், 90 வினாடிகளுக்குள் விமானத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றும் வசதியுடன் கதவுகள் அமைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விதி.
விமான விபத்துக்களில் உயிரிழப்பவர்களைவிட, விமானங்கள் வெளியிடும் நச்சுப் புகையால் அதிகமானோர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் 10,000 பேர் விமானங்களிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கார், டூ வீலர் வாங்கும் பலர் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம், எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பதே. அவ்வாறு, விமானத்திற்கு கணக்கிடும்போது போயிங் 747 விமானமானது ஒரு கேலனுக்கு 0.2 மைல் மட்டுமே மைலேஜ் தரும். அதேநேரத்தில், அதிகபட்சமாக 550 பயணிகள் வரை இந்த விமானத்தில் பயணிக்க முடியும் என்பதையும் பார்க்க வேண்டும்.
அன்புடன் உங்கள் சேவகன் சுபாஷ்!!!!!
No comments:
Post a Comment